பெண்களிடம் பணம் பறித்த விவகாரம்: காசியிடம் மீண்டும் விசாரணை தொடங்கியது திடுக்கிடும் தகவல்கள் வெளியாக வாய்ப்பு


பெண்களிடம் பணம் பறித்த விவகாரம்: காசியிடம் மீண்டும் விசாரணை தொடங்கியது திடுக்கிடும் தகவல்கள் வெளியாக வாய்ப்பு
x
தினத்தந்தி 22 May 2020 1:11 AM GMT (Updated: 22 May 2020 1:11 AM GMT)

பெண்களிடம் பணம் பறித்த விவகாரத்தில் காசியிடம் காவலில் மீண்டும் போலீசார் விசாரணையை தொடங்கினர்.

கன்னியாகுமரி, 

பெண்களிடம் பணம் பறித்த விவகாரத்தில் காசியிடம் காவலில் மீண்டும் போலீசார் விசாரணையை தொடங்கினர். விசாரணை முடிவில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

காசி

நாகர்கோவில் கணேசபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சுஜி என்ற காசி (வயது 26). இவர், தங்களை ஆபாசமாக படம் எடுத்து அதை சமூக வலைதளத்தில் பதிவிட்டு விடுவதாக மிரட்டி பணம் பறித்ததாக பெண் டாக்டர், பெண் என்ஜினீயர் உள்பட 3 பெண்கள் தனித்தனியாக நாகர்கோவில் போலீசில் புகார் அளித்து இருந்தனர்.

அதன்பேரில் காசி மீது போலீசார் வழக்குகள் பதிவு செய்தனர். அவர் மீது கந்துவட்டி வழக்கும் பதிவு செய்யப்பட்டது. காசியை குண்டர் சட்டத்தில் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். ஏற்கனவே 3 நாட்கள் காசியை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவருடன் நெருக்கமாக இருந்த நண்பர் டேசன் ஜினோவை போலீசார் கைது செய்தனர். வெளிநாட்டில் உள்ள மற்றொரு நண்பரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

6 நாள் போலீஸ் காவல்

இதற்கிடையே காசியால் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்து இருந்தார். அதுதொடர்பாக விசாரணை நடத்தப்படாமல் இருந்தது. காசி சிறையில் இருக்கும் போதுதான் அந்த சிறுமி புகார் கொடுத்து இருந்தார். எனவே காசியை காவலில் எடுத்து மீண்டும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர்.

இதற்காக நாகர்கோவிலில் உள்ள கூடுதல் மகளிர் குற்றவியல் கோர்ட்டில் கன்னியாகுமரி மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி மனுத்தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த கோர்ட்டு காசியை 6 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க நேற்று முன்தினம் அனுமதி அளித்தது. இதையடுத்து காசியை மகளிர் போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

திடுக்கிடும் தகவல்கள்

காசியால் பாதிக்கப்பட்ட பெண்களின் பட்டியலில் பட்டதாரி இளம்பெண்கள், முக்கிய பிரமுகர்களின் மனைவி, டாக்டர், என்ஜினீயர் உள்ளிட்டோர்தான் இடம் பெற்று இருந்தனர். புதிதாக சிறுமி ஒருவர் புகார் கொடுத்து இருப்பதால் காசி ஏராளமான சிறுமிகளிடமும் அத்துமீறி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

எனவே காசியிடம் 6 நாட்கள் காவலில் விசாரணை நடத்தப்படுகிறது. விசாரணை முடிவில் காசியால் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பட்டியல் வெளி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே காசி விவகாரத்தில் இன்னும் ஓரிரு நாட்களில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

போலீஸ் அதிகாரி

இதுபற்றி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், காசி மீது கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசில் ஒரு சிறுமி அளித்த புகாரின் பேரில் போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த காசியை காவலில் எடுத்துள்ளோம். தற்போது வரை காசி மீது கூடுதல் புகார்கள் எதுவும் வரவில்லை. அப்படி புகார்கள் வந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கனவே புகார் அளித்த சிறுமியுடன் காசி சுமார் 2½ ஆண்டுகள் பழகி உள்ளார். அன்பாக பேசியும், நெருங்கி பழகியும் இருக்கிறார். ஆனால் சிறுமியை மிரட்டி பணம் பறிக்கும் செயலில் ஈடுபடவில்லை. அப்படி பணம் பறிக்க முயற்சி செய்த நேரத்தில்தான் காசி போலீசில் சிக்கி உள்ளார். எனவே போலீஸ் காவலில் விசாரணை முடியும் நேரத்தில் இன்னும் பல உண்மைகள் வெளிவர வாய்ப்புள்ளது என்றார்.

மீண்டும் பரபரப்பு

காசியிடம் போலீசார் காவலில் 6 நாள் விசாரணையை தொடங்கி இருப்பதால், காசி விவகாரம் குமரி மாவட்டத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story