குமரியில் இரவு 7 மணி வரை கடைகள் திறந்து இருக்கலாம் கலெக்டர் பிரசாந்த் வடநேரே அறிவிப்பு


குமரியில் இரவு 7 மணி வரை கடைகள் திறந்து இருக்கலாம் கலெக்டர் பிரசாந்த் வடநேரே அறிவிப்பு
x
தினத்தந்தி 22 May 2020 2:08 AM GMT (Updated: 22 May 2020 2:08 AM GMT)

குமரி மாவட்டத்தில் கடைகள் இரவு 7 மணி வரை திறந்து இருக்கலாம் என கலெக்டர் பிரசாந்த் வடநேரே அறிவித்துள்ளார்.

நாகர்கோவில், 

குமரி மாவட்டத்தில் கடைகள் இரவு 7 மணி வரை திறந்து இருக்கலாம் என கலெக்டர் பிரசாந்த் வடநேரே அறிவித்துள்ளார்.

இரவு 7 மணி வரை

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

குமரி மாவட்டத்தில் இதுவரை மாலை 5 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இன்று (வெள்ளிக்கிழமை) முதல் மாலை 7 மணி வரை கடைகள் திறந்து இருக்க அதாவது கூடுதலாக 2 மணி நேரம் செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது.

ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் களபணியாளர்கள் மூலமாகவும் 10 ஆயிரத்து 516 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 49 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 16 பேர் மட்டும் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். 33 பேர் வெளி மாவட்டங்கள், மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வருகை தந்தவர்கள். 10 ஆயிரத்து 230 பேருக்கு கொரோனா தொற்று இல்லை. மீதமுள்ள நபர்களுக்கு பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை.

24 பேருக்கு சிகிச்சை

தற்போது ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் 24 பேர் சிகிச்சையில் உள்ளனர். 24 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி விட்டனர். குமரி மாவட்டத்தில் மொத்தம் 342 பேர் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு உத்தரவை மீறிய வகையில் நேற்று 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவரை 7 ஆயிரத்து 793 வழக்குகளும், 5 ஆயிரத்து 858 வாகனங்கள் பறிமுதலும் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story