முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு நிவாரணத்தொகை; மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் தகவல்


முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு நிவாரணத்தொகை; மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் தகவல்
x
தினத்தந்தி 22 May 2020 2:15 AM GMT (Updated: 22 May 2020 2:15 AM GMT)

சேலத்தில், நலவாரியத்தில் பதிவு செய்யாத முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு நிவாரணத்தொகை வழங்கப்பட உள்ளது என்று மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சேலம்,

கொரோனா தடுப்பு காலத்தில் பல்வேறு தொழில் புரிவோர்களுக்கு தமிழக அரசால் நிவாரணத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி முடிதிருத்துவோர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள தொழிலாளர்களுக்கு, அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் மூலம் 2 தவணைகளாக தலா ரூ.1,000 நிவாரணத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து முடிதிருத்துவோர் நலவாரியத்தில் பதிவு செய்யாத தொழிலாளர்களுக்கும், இதர அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் நிவாரணத்தொகை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி சேலம் மாநகராட்சிக்குட்பட்ட 4 மண்டலங்களில் உள்ள நலவாரியத்தில் பதிவு செய்யாத முடிதிருத்தும் தொழிலாளர்களும் நிவாரணத்தொகை பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. சேலம் மாநகர பகுதிகளில் உள்ள முடிதிருத்தும் தொழிலாளர்களில் பதிவு செய்யாத முடிதிருத்தும் தொழிலாளர்கள் நிவாரணத்தொகையை பெற சம்பந்தப்பட்டவர்களின் சலூன் கடைகள் இருக்கும் இடத்தை மண்டல அலுவலர்களிடம் உரிய ஆவணங்களுடன் மனுவாக சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் மண்டல அலுவலகங்களுக்கு நேரில் சென்று வங்கி கணக்கு புத்தகத்தின் முன்பக்க நகல், ஆதார் அட்டை நகல், முடிதிருத்துவோர் நல சங்கத்தின் உறுப்பினருக்கான அடையாள அட்டை நகல், சந்தா தொகை செலுத்தியதற்கான ரசீது நகல் ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து வழங்க வேண்டும்.

இதையடுத்து மாநகராட்சி அலுவலர்கள் ஆய்வு செய்து விவரங்களை சரிபார்த்து தகுதியான விண்ணப்பங்களை கலெக்டருக்கு பரிந்துரை செய்வார்கள். பின்னர் நலவாரியத்தில் பதிவு செய்யாத முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்துள்ள நிவாரணத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story