மராட்டியத்தில் இருந்து வந்தவர்கள் உள்பட நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் புதிதாக 41 பேருக்கு கொரோனா


மராட்டியத்தில் இருந்து வந்தவர்கள் உள்பட நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் புதிதாக 41 பேருக்கு கொரோனா
x

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் மராட்டியத்தில் இருந்து வந்தவர்கள் உள்பட 41 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

நெல்லை, 

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் மராட்டியத்தில் இருந்து வந்தவர்கள் உள்பட 41 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

11 பேருக்கு கொரோனா

நெல்லை மாவட்டத்தில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டில் இருந்தாலும் மராட்டியம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து வருவோருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று மராட்டிய மாநிலத்தில் இருந்து நெல்லைக்கு திரும்பி வந்தவர்களில் 11 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. மொத்தம் 316 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 11 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அம்பை, மானூர், நாங்குநேரி, வள்ளியூர் மற்றும் பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இதில் 4 வயது சிறுமி உள்பட 6 பேர் பெண்கள் ஆவார்கள்.

மாவட்டத்தில் ஏற்கனவே 242 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். தற்போது பாதிக்கப்பட்ட 11 பேருடன் சேர்த்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 253 ஆக அதிகரித்து உள்ளது. இதில் 88 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி விட்டனர். ஒரு முதியவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து விட்டார். மீதி 164 பேர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தென்காசியில் 8 பேர்

தென்காசி மாவட்டத்திலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்தவண்ணம் உள்ளது. அந்த மாவட்டத்தில் ஏற்கனவே 75 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் நேற்று மேலும் 4 பெண்கள் உள்பட 8 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் 3 பேர் மராட்டிய மாநிலத்தில் இருந்து வந்தவர்கள். மற்ற 5 பேரும் உள்ளூரை சேர்ந்தவர்கள். அதில் 4 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் மராட்டியத்தில் இருந்து வந்த நபருடன் தொடர்பில் இருந்தவர்கள்.

நேற்றைய நிலவரப்படி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 83 ஆக அதிகரித்து உள்ளது. இதில் 50 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். மீதி 33 பேர் நெல்லை மற்றும் தென்காசி அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தூத்துக்குடியில் 22 பேர்

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை மொத்தம் 113 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதில் 34 பேர் ஆஸ்பத்திரியில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 2 பேர் இறந்து விட்டனர். இந்த நிலையில் மராட்டிய மாநிலத்தில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்துக்கு வந்த மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

மேலும் தூத்துக்குடி இன்னாசியார்புரத்தில் உள்ள ஓய்வுபெற்ற பாதிரியாருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இவர் காலில் ஒரு அறுவை சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றார். பின்னர் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா சோதனை செய்தபோது தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர் தங்கியிருந்த சேதுபாதை ரோடு பகுதி மூடப்பட்டது. அந்த பகுதியில் இருந்து யாரும் வெளியில் செல்லக்கூடாது என்று மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தினர். தனிமைப்படுத்தப்பட்ட பகுதியை சேர்ந்த மக்களுக்கு ஏதேனும் அறிகுறிகள் உள்ளதா? என்று சுகாதாரத்துறையினர் பரிசோதனை செய்து வருகின்றனர். மேலும் பாஞ்சாலங்குறிச்சியை சேர்ந்த 3 பேருக்கும், மேலதட்டப்பாறையை சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்களையும் சேர்த்து தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 135 ஆக உயர்ந்து உள்ளது.

Next Story