நினைவு தினத்தையொட்டி ராஜீவ்காந்தி உருவப்படத்துக்கு காங்கிரசார் மரியாதை


நினைவு தினத்தையொட்டி ராஜீவ்காந்தி உருவப்படத்துக்கு காங்கிரசார் மரியாதை
x
தினத்தந்தி 22 May 2020 3:22 AM GMT (Updated: 22 May 2020 3:22 AM GMT)

நெல்லையில் ராஜீவ்காந்தி நினைவுதினத்தையொட்டி அவரது உருவப்படத்துக்கு காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நெல்லை, 

நெல்லையில் ராஜீவ்காந்தி நினைவுதினத்தையொட்டி அவரது உருவப்படத்துக்கு காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தனுஷ்கோடி ஆதித்தன் மரியாதை

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 29-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அவரது உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கு நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் தலைமை தாங்கினார்.

முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன், ராஜீவ்காந்தி படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது பயங்கரவாதத்துக்கு எதிராக உறுதி மொழி ஏற்கப்பட்டது. மேலும் 29 பேருக்கு அரிசி, காய்கறி, மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. வேல்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சுரண்டை- புளியங்குடி

தென்காசி மாவட்டம் சுரண்டையில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.பழனி நாடார் தலைமை தாங்கி ராஜீவ்காந்தி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் கட்சியினர் தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றனர்.

புளியங்குடியில் நகர காங்கிரஸ் தலைவர் பால்ராஜ் தலைமையில் ராஜீவ்காந்தி படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

சிவகிரியில் பஸ்நிலையம் அருகே தென்காசி மாவட்ட காங்கிரஸ் ஓ.பி.சி. பிரிவு தலைவர் திருஞானம் தலைமையில் நகர காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் சண்முகசுந்தரம் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி வாசித்தார். ஓ.பி.சி. பிரிவு தொகுதி தலைவர் காந்தி, தொகுதி பட்டதாரி பிரிவு காங்கிரஸ் தலைவர் அசோக் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

களக்காடு- திசையன்விளை

களக்காடு காமராஜர் சிலை அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ராஜீவ்காந்தி படத்திற்கு நெல்லை மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் தமிழ்செல்வன் தலைமையில் பலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதேபோல் களக்காடு நகர காங்கிரஸ் தலைவர் ஜார்ஜ் வில்சன் தலைமையில் பலர் மரியாதை செலுத்தினர்.

திசையன்விளை காங்கிரஸ் கட்சி ஓ.பி.சி. பிரிவு அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட காங்கிரஸ் ஓ.பி.சி. பிரிவு தலைவர் மும்பை ஜாண் கென்னடி தலைமை தாங்கினார். மாநில காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினரும், மாவட்ட பஞ்சாயத்து ராஜ் சங்க ஒருங்கிணைப்பாளருமான கே.பி.கே.ஜெயக்குமார், ராஜீவ்காந்தி உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் எஸ்.குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

திசையன்விளை நகர காங்கிரஸ் சார்பில் ராஜீவ்காந்தி உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் நகர தலைவர் ராஜன், மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் விஜயபெருமாள், மாவட்ட காங்கிரஸ் கொள்கை பரப்பு செயலாளர் மருதூர் மணிமாறன், மாவட்ட காங்கிரஸ் ஓ.பி.சி. பிரிவு தலைவர் ஜான் கென்னடி உள்பட பலர் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்தனர்.

Next Story