கொரோனா பரிசோதனை செய்வதற்காக வெளிமாநிலத்தில் இருந்து விழுப்புரம் வந்தவர்களை கண்டறியும் பணி


கொரோனா பரிசோதனை செய்வதற்காக வெளிமாநிலத்தில் இருந்து விழுப்புரம் வந்தவர்களை கண்டறியும் பணி
x
தினத்தந்தி 22 May 2020 4:12 AM GMT (Updated: 22 May 2020 4:12 AM GMT)

கொரோனா பரிசோதனை செய்வதற்காக வெளிமாநிலத்தில் இருந்து விழுப்புரம் வந்தவர்களை கண்டறியும் பணியில் சுகாதாரத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா நோய் தொற்றினால் 318 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் டெல்லி மாநாடுக்கு சென்று விட்டு திரும்பியவர்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அதேபோல் சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து விழுப்புரம் மாவட்டத்திற்கு வந்தவர்களில் 250 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதில் அவர்களில் 230 பேர் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சூழலில் தற்போது மராட்டிய மாநிலத்தில் இருந்து வந்தவர்களில் இதுவரை 6 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் மராட்டியம் உள்ளிட்ட பல்வேறு வெளிமாநிலங்களில் இருந்து சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டத்திற்கு வந்த 70-க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்த சூழலில் வெளிமாநிலங்களில் இருந்து சிலர் யாருக்கும் தெரியாமல் சரக்கு வாகனங்களில் லிப்ட் கேட்டு அவரவர் சொந்த ஊருக்கு வந்துள்ளதாகவும், இவர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் முறையாக தகவல் தெரிவிக்காமல் வீட்டிலேயே இருப்பதாகவும், இதுவரை அந்த பட்டியலில் 25-க்கும் மேற்பட்டோர் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இவர்களை 14 நாட்கள் முகாமில் தங்க வைத்து தனிமைப்படுத்தி கொரோனா பரிசோதனை செய்யவும், இவர்கள் மூலம் அவர்கள் வசிக்கும் பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு கொரோனா நோய் தொற்று பரவாமல் இருக்கும் வகையிலும் வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்கள் யார், யார்? என்று வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரின் உதவியுடன் அவர்களை கண்டறியும் பணியில் சுகாதாரத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story