சிதம்பரம் பகுதியில் குடிமராமத்து பணிகள் தொடக்கம்


சிதம்பரம் பகுதியில் குடிமராமத்து பணிகள் தொடக்கம்
x
தினத்தந்தி 22 May 2020 6:08 AM GMT (Updated: 22 May 2020 6:08 AM GMT)

சிதம்பரம் பகுதியில் குடிமராமத்து பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

காட்டுமன்னார்கோவில், 

சிதம்பரம் பகுதியில் உள்ள பாசன வாய்க்கால்கள் குடிமராமத்து பணிகளின் கீழ் தூர்வாரும் பணிகள் தொடங்கி உள்ளது. அதன்படி காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உடையார்குடி பாசன வாய்க்கால், பாபநாயக்கன் வாய்க்கால், ருத்திரசோலை பாசன வாய்க்கால் உள்ளிட்ட 5 பாசன கிளை வாய்க்கால்கள் குப்பைகளாலும், மண்ணாலும் தூர்ந்து காணப்பட்டது. 

இதையடுத்து தூர்ந்து கிடக்கும் பாசன வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தனர். அதன்அடிப்படையில் 5 பாசன வாய்க்கால்களை தூர்வாரிட முதல்-அமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.26 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான தொடக்க விழா உடையார்குடியில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு சிதம்பரம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சாம்ராஜ் தலைமை தாங்கினார். பொறியாளர் அருணகிரி, உதவி பொறியாளர் வெற்றிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், காட்டுமன்னார்கோவில் தொகுதி எம்.எல்.ஏ.வுமான முருகுமாறன் கலந்து கொண்டு குடிமராமத்து திட்ட பணியை தொடங்கி வைத்தார்.

இதில் ஒன்றிய செயலாளர் வாசு முருகையன், நகர செயலாளர் எம்.ஜி.ஆர்.தாசன், காட்டுமன்னர்கோவில் நகர வங்கி தலைவர் அறிவுக்கரசன், நகர பொருளாளர் வசந்தகுமார், கூட்டுறவு சங்க தலைவர்கள் தோத்தாத்திரி, அசோகன், அ.தி.மு.க. நிர்வாகிகள் பாக்கியராஜ், சஞ்சய்காந்தி, ராஜீவ்காந்தி, ராஜேஷ், பெருமாள், விவசாயிகள் மணிமாறன், பாஸ்கரன், தேசிங்குராஜன், பாலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கிள்ளை அருகே உள்ள பாசன வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து, சிதம்பரம் கோட்ட பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை சார்பில் கிள்ளை அருகே உள்ள 6 வாய்க்கால்களை குடிமராமத்து பணிகளின் கீழ் ரூ.18 லட்சம் செலவில், விவசாயிகளின் 10 சதவீத பங்களிப்புடன் தூர்வார நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சிதம்பரம் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சாம்ராஜ், உதவி செயற்பொறியாளர் அருணகிரி ஆகியோர் உத்தரவின் பேரில் கிள்ளை அருகே உள்ள பாசன வாய்கால்களான நான்கொண்டல் வாய்க்கால், பொன்னுசாமி வாய்க்கால், குழந்தைவேல் வாய்க்கால், பக்கிரி வாய்க்கால், சின்னத்தெரு வாய்க்கால் மற்றும் சிங்காரகுப்பம் வடிகால் வாய்க்கால் ஆகியன பொக்லைன் எந்திரம் மூலம் தூர்வாரப்பட்டு வருகிறது.

இதில், கிள்ளை அருகே தில்லைவிடங்கன் கிராமத்தில் உள்ள நான்கொண்டல் வாய்க்கால் தூர்வாரும் பணியை நேற்று காலை பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ரமேஷ் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் விவசாய சங்க தலைவர் முத்துக்குமார், செயலாளர் பாலசுப்பிரமணியன், துணைத்தலைவர் சிவமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story