வேறொருவரை திருமணம் செய்வதாக கூறியதால் இளம்பெண் கொலை காதலன் போலீசில் சரண்


வேறொருவரை திருமணம் செய்வதாக கூறியதால் இளம்பெண் கொலை காதலன் போலீசில் சரண்
x
தினத்தந்தி 22 May 2020 10:15 PM GMT (Updated: 22 May 2020 8:49 PM GMT)

பெங்களூருவில் திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில் வசித்து வந்த நிலையில், வேறொருவரை திருமணம் செய்வதாக கூறியதால் இளம்பெண்ணை, காதலன் தோசை டவாவால் தாக்கி கொலை செய்தார்.

பெங்களூரு,

பெங்களூருவில் திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில் வசித்து வந்த நிலையில், வேறொருவரை திருமணம் செய்வதாக கூறியதால் இளம்பெண்ணை, காதலன் தோசை டவாவால் தாக்கி கொலை செய்தார். இதையடுத்து, போலீசில் சரண் அடைந்த காதலனை போலீசார் கைது செய்து உள்ளனர்.

துமகூரு மாவட்டம் பாவகடாவை சேர்ந்தவர் திப்பேசாமி (வயது 26). டிரைவரான இவர், பெங்களூருவில் கார் ஓட்டி வருகிறார். கடந்த 8 மாதத்திற்கு முன்பு சிக்கமகளூரு மாவட்டம் தரிக்கெரேயை சேர்ந்த நயனா (24) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அதாவது திப்பேசாமியின் காரில் நயனா பயணம் செய்ததால், அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு இருந்தது. இந்த பழக்கம் 2 பேருக்கும் இடையே காதலாக மாறியது. கடந்த 4 மாதமாக மாரத்தஹள்ளி அருகே முனேகொலலா பகுதியில் வாடகை வீட்டில் திப்பேசாமியும், நயனாவும் திருமணம் செய்யாமலேயே கணவன்-மனைவி போல் வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில், நயனாவிடம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று திப்பேசாமி கூறியுள்ளார். ஆனால் தான் வேறு ஒரு வாலிபரை காதலிப்பதாகவும், அவரை தான் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் திப்பேசாமியிடம் நயனா கூறியதாக தெரிகிறது. இதுதொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது வீட்டில் இருந்த கத்தியை எடுத்து திப்பேசாமியை நயனா குத்தியுள்ளார். இதில், அவரது கையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. நயனாவிடம் இருந்து கத்தியை திப்பேசாமி வாங்கி கொண்டார்.

அதன்பிறகு சமையல் அறையில் இருந்த தோசை டவாவை எடுத்து திப்பேசாமியை நயனா தாக்க முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த அவர், தோசை டவாவை நயனாவிடம் இருந்து பிடுங்கி அவரது தலையில் பலமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், பலத்த காயம் அடைந்த நயனா பரிதாபமாக இறந்து விட்டார். அதன்பிறகு, மாரத்தஹள்ளி போலீஸ் நிலையத்திற்கு சென்ற திப்பேசாமி தனது காதலியான நயனாவை கொலை செய்து விட்டதாக கூறி சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்தார்கள்.

இதைதொடர்ந்து போலீசார், முனேகொலலாவுக்கு சென்று நயனாவின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது திப்பேசாமியை காதலித்துவிட்டு, வேறொரு வாலிபரை திருமணம் செய்யப்போவதாக நயனா கூறியதால் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து மாரத்தஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து திப்பேசாமியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story