திருட்டு வழக்கில் கைதான வாலிபருக்கு கொரோனா ஹெப்பகோடி போலீசார் 30 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை கைதான மேலும் ஒருவருக்கும் தொற்று உறுதி


திருட்டு வழக்கில் கைதான வாலிபருக்கு கொரோனா ஹெப்பகோடி போலீசார் 30 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை கைதான மேலும் ஒருவருக்கும் தொற்று உறுதி
x
தினத்தந்தி 22 May 2020 10:30 PM GMT (Updated: 22 May 2020 8:52 PM GMT)

பெங்களூரு அருகே திருட்டு வழக்கில் கைதான வாலிபருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது.

பெங்களூரு,

பெங்களூரு அருகே திருட்டு வழக்கில் கைதான வாலிபருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. இதனால் அவரை கைது செய்த ஹெப்பகோடி போலீசார் 30 பேரின் சளி, ரத்தம் மாதிரி சேகரித்து பரிசோதிக்கப்பட்டது. அதில் 30 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது.

திருடனுக்கு கொரோனா பாதிப்பு

பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா ஹெப்பகோடியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் கட்டுமான நிறுவனத்தில் இரும்பு கம்பிகள் திருட்டுப்போய் இருந்தது. இதுதொடர்பாக ஹெப்பகோடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடிவந்தனர். பின்னர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை கடந்த 16-ந் தேதி கட்டுமான நிறுவனத்தினர், பொதுமக்கள் பிடித்து தர்ம-அடி கொடுத்து ஹெப்பகோடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்களில் ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருந்தது. இதையடுத்து, அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதியானது. அந்த நபர் பாதராயனபுராவை சேர்ந்தவர் ஆவார்.

அதைத்தொடர்ந்து, அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அதே நேரத்தில் திருடனுடன் தொடர்பில் இருந்ததாக ஹெப்பகோடி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 30 போலீசார் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. திருடனுடன் தொடர்பில் இருந்ததால் 30 போலீசாரும் தங்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படலாம் என்று பீதி அடைந்தனர். மேலும் மற்ற 2 திருடர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

போலீசார் நிம்மதி

இந்த நிலையில், ஹெப்பகோடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர், சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் உள்பட 30 போலீசாருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில், அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது நேற்று உறுதியாகி உள்ளது. இதனால் அவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். அதே வேளையில் கைதான மற்ற 2 திருடர்களில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி இருக்கிறது. இதையடுத்து, ராஜீவ்காந்தி நெஞ்சக ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

ஹெப்பகோடி போலீசாரால் கைதான மற்றொரு திருடனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதால், போலீஸ் நிலையம் முழுவதும் நேற்று கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.


Next Story