பாந்திரா இடுகாட்டில் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை புதைக்க தடை கோரிய மனு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு


பாந்திரா இடுகாட்டில் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை புதைக்க தடை கோரிய மனு தள்ளுபடி ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 22 May 2020 11:15 PM GMT (Updated: 22 May 2020 11:07 PM GMT)

பாந்திரா இடுகாட்டில் கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை புதைக்க தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்து மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மும்பை,

கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கும் மும்பையில் கொரோனா நோயால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யவும், தகனம் செய்யவும் 20 இடுகாடு மற்றும் மயானங்களுக்கு மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது. ஆனால் இறந்தவர்களின் உடல்களில் இருந்து நோய்தொற்று பரவ வாய்ப்பு உள்ளதாக கூறி, பாந்திராவில் உள்ள இடுகாட்டில் அவர்களின் உடல்களை புதைக்க தடை விதிக்க கோரி அந்த பகுதியை சேர்ந்த பிரதீப் காந்தி என்பவர் மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இது தொடர்பாக மாநகராட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில், கொரோனா வைரஸ் சடலங்கள் மூலம் பரவாது என்றும், உரிய வழிகாட்டுதல்களுடன் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் புதைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

நேற்று இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி தீபங்கர் தத்தா மற்றும் நீதிபதி எஸ்.எஸ்.ஷிண்டே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நடந்தது.

அப்போது, கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களில் இருந்து அந்த நோய் தொற்று பரவும் என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை என்று கூறிய நீதிபதிகள் பிரதீப் காந்தியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மேலும் கொரோனா நோயாளிகளின் உடல்களை புதைக்க மற்றும் தகனம் செய்வதற்கு இடுகாடு மற்றும் மயானங்களை தேர்வு செய்யும் அதிகாரம் மாநகராட்சிக்கு உள்ளது என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர்.


Next Story