சிதம்பரம் தற்காலிக காய்கறி மார்க்கெட்டுக்கு மாற்று இடம் தேர்வு


சிதம்பரம் தற்காலிக காய்கறி மார்க்கெட்டுக்கு மாற்று இடம் தேர்வு
x
தினத்தந்தி 23 May 2020 5:22 AM GMT (Updated: 23 May 2020 5:22 AM GMT)

சிதம்பரம் தற்காலிக காய்கறி மார்க்கெட்டுக்கு மாற்று இடம் தேர்வு செய்யப்பட உள்ளது. இதற்கான இடத்தை சப்-கலெக்டர் விசுமகாஜன் நேரில் ஆய்வு செய்தார்.

சிதம்பரம், 

 கொரோனா பரவலை தடுக்கும் வகையில் சிதம்பரம் மேலவீதியில் இயங்கி வந்த காய்கறி மார்க்கெட் தற்காலிகமாக சிதம்பரம் பஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில் தமிழக அரசு போக்குவரத்து தொடங்க ஆயத்தமாகி வருகிறது. 

இதையடுத்து பஸ் நிலையத்தில் இயங்கும் காய்கறி மார்க்கெட்டுக்கு மாற்று இடமாக, சிதம்பரம் ராமசாமி செட்டியார் நகர மேல்நிலைப்பள்ளிக்கு சொந்தமான விளையாட்டு மைதானத்தில் அமைக்கலாம் என்று அதிகாரிகள் தரப்பில் ஆலோசனை நடத்தினர்.  

இதையடுத்து அங்குள்ள வசதிகள் குறித்து சிதம்பரம் சப்-கலெக்டர் விசு மகாஜன் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது அவருடன் நகராட்சி ஆணையர் சுரேந்தர் ஷா, சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், தாசில்தார் ஹரிதாஸ், பொறியாளர் மகாராஜன்,சிதம்பரம் இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் உடன் சென்றிருந்தனர். 

இதேபோல் வடக்கு மெயின்ரோட்டில் உள்ள மீன் மார்க்கெட் தற்போது உழவர் சந்தையில் இயங்கி வருகிறது. அங்கு ஆய்வு செய்வதற்காக சப்-கலெக்டர் விசுமகாஜன் தலைமையிலான அதிகாரிகள் சென்றனர். 

அப்போது , பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமலும், முககவசம் அணியாமலும் இருந்தனர். இதையடுத்து முககவசம் அணியாமல் வந்த 20-க்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து தலா ரூ. 100 அபராதம் வசூலிக்கப்பட்டது.

 தொடர்ந்து அங்கிருந்த வியாபாரிகளிடம் சமூக இடைவெளியை கடைபிடித்து முககவசம் அணிந்து வருபவர்களுக்கே வியாபாரம் செய்யும் மாறு அவர் அறிவுறுத்தினார். 

காய்கறி மார்க்கெட் இடமாற்றம் குறித்து அதிகாரிகள் தரப்பில் விசாரித்த போது, சிதம்பரம் பஸ் நிலையத்தில் உள்ள தற்காலிக காய்கறி மார்க்கெட் வேறு இடத்துக்கு மாற்றப்பட உள்ளது. 

இதற்கு அனைத்து வசதியுடன் கூடிய இடம் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. இன்னும் எந்த ஒரு இடமும் இறுதி செய்யப்படவில்லை. விரைவில் இதற்கான முடிவுகள் தெரிவிக்கப்படும் என்று தெரிவித்தனர்.

Next Story