நெல்லையில் ஊரடங்கு வேளையில் துணிகரம்: ஒரே நாளில் 10 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை


நெல்லையில் ஊரடங்கு வேளையில் துணிகரம்: ஒரே நாளில் 10 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை
x
தினத்தந்தி 23 May 2020 9:44 PM GMT (Updated: 23 May 2020 9:44 PM GMT)

நெல்லையில் ஊரடங்கு வேளையில் ஒரே நாளில் 10 கடைகளில் பூட்டை உடைத்து மர்மநபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இதுதொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை, 

நெல்லையில் ஊரடங்கு வேளையில் ஒரே நாளில் 10 கடைகளில் பூட்டை உடைத்து மர்மநபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இதுதொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

கடைகளில் கொள்ளை

கொரோனா ஊரடங்கு காலத்தால் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. தற்போது நெல்லையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் கடந்த 2 வாரங்களாக மீண்டும் கடைகள் திறக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் நெல்லை சந்திப்பு பகுதியில் நேற்று முன்தினம் ஒரே நாள் இரவில் 10 கடைகளில் பூட்டை உடைத்து மர்மநபர்கள் கைவரிசை காட்டி உள்ளனர்.

சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சாலைக்குமரர் சாமி கோவில் பகுதி, மதுரை ரோடு ஆகிய பகுதிகளில் கைக்கெடிகார கடை, பூக்கடை, எலக்ட்ரிக்கல் கடை, டீக்கடை உள்பட 5 கடைகளில் மர்மநபர்கள் பூட்டை உடைத்து உள்ளே கல்லா பெட்டியில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

போலீசில் புகார்

ஒரு டீக்கடையில் ஷட்டர் கதவின் ஒரு பக்க பூட்டை மட்டும் உடைத்து விட்டு சென்றுள்ளனர். இதுதவிர ரெயில்வே தண்டவாளத்தின் மேற்கு பகுதியில் மருந்து கடை, பிளம்பர் கடை, கண்ணாடி கடை உள்பட 4 கடைகளில் பூட்டை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் நெல்லை சந்திப்பு மற்றும் டவுன் குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அங்கு பதிவாகி இருந்த மர்மநபர்களின் தடயங்களை சேகரித்தனர். கொள்ளை சம்பவம் குறித்து போலீசாரிடம் வியாபாரிகள் புகார் அளித்தனர். மேலும், நெல்லை மாநகர் சந்திப்பு ஹைரோடு வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் சார்பிலும் சந்திப்பு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடினர்.

ஒருவர் கைது

இதற்கிடையே, டவுன் குற்றப்பிரிவு துணை கமிஷனர் மகேஷ்குமார், உதவி கமிஷனர் ராஜூ, இன்ஸ்பெக்டர் சண்முகவடிவு ஆகியோர், கொள்ளை நடந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் 2 பேர் இந்த கொள்ளையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி, நெல்லை டவுன் வயல் தெருவை சேர்ந்த கொம்பையா என்பவரை பிடித்து கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். ஊரடங்கு வேளையில் ஒரே நாளில் 10 கடைகளில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story