நெல்லையில் கொரோனா பாதித்த பகுதிகளில் சுகாதார பணிகள் தீவிரம் மாநகராட்சி ஆணையாளர் நேரில் ஆய்வு


நெல்லையில் கொரோனா பாதித்த பகுதிகளில் சுகாதார பணிகள் தீவிரம் மாநகராட்சி ஆணையாளர் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 23 May 2020 9:58 PM GMT (Updated: 23 May 2020 9:58 PM GMT)

நெல்லையில் கொரோனா பாதித்த பகுதிகளில் சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அந்த பகுதிகளுக்கு மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

நெல்லை, 

நெல்லையில் கொரோனா பாதித்த பகுதிகளில் சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அந்த பகுதிகளுக்கு மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

கொரோனா பாதிப்பு

நெல்லை மாநகரில் மேலப்பாளையம், கோடீசுவரன் நகர், பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா தொற்று முன்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று குணமடைந்தனர். மேலும், மற்றவர்களுக்கு தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் நெல்லை மாநகராட்சி ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் தீவிர நடவடிக்கையில் இறங்கினர். கிருமி நாசினி தெளித்து, சுகாதார பணிகளை மேற்கொண்டதன் விளைவாக கொரோனா பரவாமல் தடுக்கப்பட்டது.

இந்த நிலையில் நெல்லை மாநகரில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று பரவி உள்ளது. அதில் சிந்துபூந்துறையை சேர்ந்த டி.வி. மெக்கானிக் ஒருவருக்கு நேற்று முன்தினம் கொரோனா உறுதி செய்யப்பட்டது.

30 வீடுகளில் ஸ்டிக்கர்

இதையடுத்து அவரது கடை பூட்டி எச்சரிக்கை அறிவிப்பு பேனர் கட்டப்பட்டது. இதேபோல் அவரது வீடு பகுதியிலும் எச்சரிக்கை அறிவிப்பு பேனர் கட்டினர். மேலும், அவர் சென்று வந்த 30 வீடுகள் கண்டறியப்பட்டு, தனிமைப்படுத்துவதற்கான ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மராட்டிய மாநிலம் மும்பையில் இருந்து டவுனில் உள்ள ஒரு தெருவுக்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் வந்துள்ளனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் ஒருவருக்கு நேற்று கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. உடனடியாக அவர் ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவரது குடும்பத்தினர் வீட்டில் தாமாகவே தனிமைப்படுத்திக் கொள்ள ஆலோசனை வழங்கப்பட்டது.

ஆணையாளர் ஆய்வு

இந்த நிலையில் நெல்லை மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் நேற்று சிந்துபூந்துறை மற்றும் டவுன் பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். அங்கு அவரது முன்னிலையில் பிளச்சிங் பவுடர் தூவி, நவீன கருவி மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

அந்த தெருவுக்குள் வேறு பகுதியை சேர்ந்தவர்கள் நுழையவும் தடை விதிக்கப்பட்டது. இதுதவிர தூய்மை பணியாளர்கள் மூலம் கொரோனா மேலும் பரவாமல் தடுக்க பணிகள் முடுக்கி விடப்பட்டது. அந்த பகுதியில் யாருக்கும் காய்ச்சல், இருமல் அறிகுறி உள்ளதா? என்று கணக்கெடுப்பு நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Next Story