சமூக இடைவெளியுடன் மும்பை பிலிம் சிட்டியில் படப்பிடிப்பை நடத்த முடியுமா? ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு, உத்தவ் தாக்கரே உத்தரவு


சமூக இடைவெளியுடன் மும்பை பிலிம் சிட்டியில் படப்பிடிப்பை நடத்த முடியுமா? ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு, உத்தவ் தாக்கரே உத்தரவு
x
தினத்தந்தி 24 May 2020 12:00 AM GMT (Updated: 23 May 2020 11:55 PM GMT)

மும்பை பிலிம் சிட்டியில் சமூக இடைவெளியுடன் படப்பிடிப்பை நடத்த முடியுமா? என்பது குறித்து ஆய்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு, முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உத்தரவிட்டு உள்ளார்.

மும்பை,

இந்தி மற்றும் மராத்தி திரையுலகின் தலைநகரமான மும்பையில் கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் மாத பிற்பகுதியில் சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களின் படப்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக 3 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சினிமா துறையை சேர்ந்தவர்கள் பலர் சமீபத்தில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது படப்பிடிப்பை தொடங்குவது குறித்து செயல்திட்டத்தை தயாரித்து அரசிடம் தாக்கல் செய்யுமாறு அவர்களுக்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவுறுத்தி இருந்தார்.

இந்திய ஒளிபரப்பு பிரிவு பிரதிநிதிகள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை காணொலி காட்சி மூலம் சந்தித்து பேசினார்கள்.

இதில் சினிமா, டி.வி. தொடர் படப்பிடிப்புகள் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

அப்போது, சமூக விலகல் விதிமுறைகளை பின்பற்றி சிவப்பு மண்டலம் அல்லாத பிற பகுதிகளில் சினிமா படப்பிடிப்பு நடத்துவது தொடர்பாக செயல் திட்டத்தை தயாரிக்கும்படி முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அவர்களிடம் கூறினார். அவர்கள் செயல்திட்டத்தை தயார் செய்து சமர்ப்பித்த பிறகு படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்குவது தொடர்பான முடிவு எடுக்கப்படும் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தெரிவித்து உள்ளார்.

இதேபோல மும்பை பிலிம் சிட்டியில் சமூக இடைவெளியை பின்பற்றி படப்பிடிப்பு தொடங்க முடியுமா என்பது குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார்.

Next Story