அனைத்து நிறுவன வாசல்களிலும் கை கழுவும் வசதி ஏற்படுத்த வேண்டும் மாநகராட்சி உத்தரவு


அனைத்து நிறுவன வாசல்களிலும் கை கழுவும் வசதி ஏற்படுத்த வேண்டும் மாநகராட்சி உத்தரவு
x
தினத்தந்தி 24 May 2020 1:40 AM GMT (Updated: 24 May 2020 1:40 AM GMT)

அனைத்து நிறுவன நுழைவு வாயில்களிலும் கை கழுவும் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

அனைத்து நிறுவன நுழைவு வாயில்களிலும் கை கழுவும் வசதி ஏற்படுத்த வேண்டும் என்று மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி கமிஷனர் விசாகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அலுவலகங்கள்

தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி மதுரை மாநகராட்சி பகுதிகளில் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்காக முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தொற்று தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939 பிரிவு 62-ன் கீழ் பொது சுகாதார துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டிய தொற்று நோயாக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரிவு 76-ன்படி தமிழ்நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் உள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டு கொள்ளை நோய் சட்டம் 1897-ன்படி வழிகாட்டி நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

அதன்படி அரசு, தனியார் அலுவலகங்கள், மருத்துவமனைகள், அடுக்குமாடி குடியிருப்புகள், தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் முதலான இடங்களில் பணிபுரிபவர்கள் மற்றும் வருகை புரிபவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தேவையான அளவு தண்ணீர் குழாய்கள் மற்றும் வாஷ்பேசின்கள் வைத்திருக்க வேண்டும். மேலும் அங்கு திரவ சோப்பு கரைசல் அல்லது கைகழுவ சோப்பு வைக்கப்பட வேண்டும்.

கொள்ளை நோய்

அனைவரும் கட்டிடத்திற்குள் நுழையும் முன்பும், வெளியில் செல்லும் முன்பும் கைகளை கழுவிய பிறகே அனுமதிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் மற்றும் கொள்ளை நோய் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தனியார் நிறுவனங்கள், தனியார் அலுவலகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்லும் வணிக நிறுவனங்கள் கொரோனா வைரஸ் தொற்றினை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமி நாசினி மருந்துகள் வைத்திருக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story