நீண்ட நாட்களுக்கு பிறகு ஆட்டோ, சைக்கிள் ரிக்‌ஷாக்கள் மீண்டும் இயங்கின


நீண்ட நாட்களுக்கு பிறகு ஆட்டோ, சைக்கிள் ரிக்‌ஷாக்கள் மீண்டும் இயங்கின
x
தினத்தந்தி 24 May 2020 3:14 AM GMT (Updated: 24 May 2020 3:14 AM GMT)

நீண்ட நாட்களுக்கு பிறகு திருச்சி மாவட்டத்தில் ஆட்டோ, சைக்கிள் ரிக்‌ஷாக்கள் மீண்டும் இயங்கின.

திருச்சி, 

நீண்ட நாட்களுக்கு பிறகு திருச்சி மாவட்டத்தில் ஆட்டோ, சைக்கிள் ரிக்‌ஷாக்கள் மீண்டும் இயங்கின.

கொரோனா வைரஸ் பாதிப்பு

உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பஸ், ரெயில், விமானம், ஆட்டோ, சைக்கிள் ரிக்‌ஷா உள்ளிட்ட அனைத்து வகையான போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டது. அத்தியாவசிய பொருட்களான காய்கறி, மளிகை, பால் விற்பனை செய்யும் கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டன. இதனால் பலர் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வந்தனர். அனைத்து வகையான தொழில்களும் முடங்கியதால் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் செய்வதறியாது தடுமாறி வந்தனர்.

இந்தநிலையில் தற்போது 4-வது கட்டமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில், படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. முடக்கப்பட்ட பல்வேறு தொழில்களை மீண்டும் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் சலூன் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

ஆட்டோ, சைக்கிள் ரிக்‌ஷாக்கள் இயங்கின

இந்தநிலையில் ஆட்டோ, சைக்கிள் ரிக்‌ஷாக்கள் இயங்கலாம் என்றும், ஆனால் அதில் ஒருவர் மட்டுமே செல்ல வேண்டும் என்றும் நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து திருச்சி மாவட்டத்தில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று ஆட்டோ, சைக்கிள் ரிக்‌ஷாக்கள் மீண்டும் செயல்பட தொடங்கின. மாநகரில் பல்வேறு இடங்களில் டிரைவர்கள், ஆட்டோக்களுக்கு தீபம் ஏற்றி வழிபட்டு விட்டு வேலைக்கு புறப்பட்டனர். ஆனால் ஒரு சில இடங்களில் அரசின் விதிமுறைகளை மீறும் வகையில் 2 மற்றும் 3 பேர் ஆட்டோவில் பயணம் செய்ததை காண முடிந்தது. கொரோனா வைரசின் தாக்கம் தற்போது வரை குறையாத நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்த்தப்பட்டபோதிலும் விதிமுறைகளை முறையாக கடைபிடித்து ஆட்டோ, சைக்கிள் ரிக்‌ஷாக்களை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

Next Story