கோத்தகிரியில் ஆட்டிறைச்சி விலை உயர்வு கிலோ ரூ.800-க்கு விற்பனை


கோத்தகிரியில் ஆட்டிறைச்சி விலை உயர்வு   கிலோ ரூ.800-க்கு விற்பனை
x
தினத்தந்தி 25 May 2020 12:37 AM GMT (Updated: 25 May 2020 12:37 AM GMT)

கோத்தகிரியில் ஆட்டிறைச்சி விலை உயர்ந்து உள்ளது. கிலோ ரூ.800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கோத்தகிரி,

கோத்தகிரி பேரூராட்சி சார்பில் 4 ஆட்டிறைச்சி கடைகள் கடைவீதி பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்த கடைகள் ஆண்டுதோறும் ஏலம் விடப்பட்டு, அதிக வாடகைக்கு ஏலம் கோருவோருக்கு கடைகள் ஒதுக்கப்பட்டு ஆண்டுதோறும் 15 சதவீதம் வாடகை உயர்த்தப்பட்டு தொழில், குப்பை என பல்வேறு வரிகளும் வியாபாரிகளிடம் வசூலிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் கடைவீதியில் கொரோனா தொற்று அறிகுறி தென்பட்டதால், ஆட்டிறைச்சி கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. இதற்கிடையே கடந்த சில வாரங்களாக கோத்தகிரி காந்தி மைதானத்தில் திறந்தவெளியில் ஆட்டிறைச்சி கடைகள் செயல்பட்டு வருகிறது.

விலை உயர்வு

இந்த நிலையில் ஊரடங்கால் போக்குவரத்து இல்லாததால் சமவெளி பகுதிகளில் இருந்து இறைச்சிக்காக ஆடுகளை கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் கிராம பகுதிகளில் மட்டும் ஆடுகள் வெட்டப்பட்டு, ஒரு கிலோ ஆட்டிறைச்சி ரூ.950-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது திறந்தவெளி சந்தையில் ஆட்டிறைச்சி கடைகள் திறக்கப்பட்டு உள்ளன. இங்கு ஒரு கிலோ ரூ.800-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஊரடங்குக்கு முன்பு ஒரு கிலோ ஆட்டிறைச்சி ரூ.680-க்கு விற்பனையானது. ஊரடங்கால் விலை உயர்ந்து உள்ளது.

வியாபாரம் பாதிப்பு

இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறியதாவது:-

ஊரடங்கால் பொது போக்குவரத்து முடங்கி உள்ளதால் வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு சென்று ஆடுகளை கொள்முதல் செய்ய முடிவது இல்லை. ஆடு வளர்க்கும் விவசாயிகள் ஆடுகளின் விலையை உயர்த்தி உள்ளனர்.

மேலும் குறைந்த எண்ணிக்கையில் ஆடுகளை சரக்கு வாகனத்தில் விற்பனைக்காக கொண்டு வருவதால் கொள்முதல் விலை உயர்ந்து உள்ளது. கோத்தகிரி பேரூராட்சியில் அனுமதி பெற்றுள்ள 4 கடைகளை தவிர, அனுமதியின்றி சுகாதாரமற்ற முறையில் ஆட்டிறைச்சி விற்பனை நடந்து வருகிறது.

அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் பேரூராட்சி கடைகளை அதிக தொகைக்கு ஏலத்தில் எடுத்து வரிகளை முறையாக செலுத்தி வரும் வியாபாரிகளுக்கு வியாபாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே அனுமதியின்றி செயல்படும் ஆட்டிறைச்சி கடைகளை மூட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story