கட்டுப்பாடுகளுடன் கடைகள் திறப்பு: சேலத்தில் இறைச்சி, மீன் விற்பனை மும்முரம்


கட்டுப்பாடுகளுடன் கடைகள் திறப்பு: சேலத்தில் இறைச்சி, மீன் விற்பனை மும்முரம்
x
தினத்தந்தி 25 May 2020 3:17 AM GMT (Updated: 25 May 2020 3:17 AM GMT)

சேலத்தில் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்ட கடைகளில் இறைச்சி, மீன் விற்பனை மும்முரமாக நடந்தது.

சேலம்,

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. சேலம் மாநகரில் இறைச்சி மற்றும் மீன் கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இறைச்சி வாங்க பொதுமக்கள் கூட்டமாக குவிந்ததால் கடந்த ஏப்ரல் மாதம் 11-ந் தேதி முதல் மாநகராட்சி பகுதியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி மற்றும் மீன் கடைகள் செயல்பட தடை விதித்து மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது.

இதனால் வாரத்தில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை மட்டுமே இறைச்சி விற்பனை நடைபெற்று வந்தது. இந்நிலையில் இறைச்சிக் கடை உரிமையாளர்கள் தங்களது கடைகளை அனைத்து நாட்களிலும் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று மாநகராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்தனர். இதை பரிசீலனை செய்த மாநகராட்சி நிர்வாகம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் உரிய கட்டுப்பாடுகளுடன் இறைச்சி மற்றும் மீன் கடைகளை திறக்க அனுமதி அளித்தது.

இதையடுத்து நேற்று முன்தினம் சேலம் மாநகர பகுதியில் உள்ள இறைச்சி மற்றும் மீன் கடைகள் திறக்கப்பட்டன. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையான நேற்று இறைச்சி மற்றும் மீன் கடைகளில் வியாபாரம் மும்முரமாக நடைபெற்றது. குறிப்பாக தாதகாப்பட்டி, குகை, சூரமங்கலம், அஸ்தம்பட்டி, செவ்வாய்ப்பேட்டை பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகளில் கூட்டம் அலைமோதியது. அதேபோல் சூரமங்கலம் பகுதியில் உள்ள மீன் மார்க்கெட்டிலும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் சமூக இடைவெளியுடன் காத்திருந்து தங்களுக்கு தேவையான மீன் வகைகளை வாங்கி சென்றனர்.

இறைச்சி கடைகளிலும் முக கவசம் அணிந்து பாத்திரம் கொண்டு வந்த வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இறைச்சி விற்பனை செய்யப்பட்டது. சேலத்தில் நேற்று ஒரு கிலோ ஆட்டிறைச்சி ரூ.800-க்கும், ஒரு கிலோ பிராய்லர் கோழி ரூ.220 முதல் ரூ.230 வரையிலும், ஒரு கிலோ நாட்டுக்கோழி ரூ.400 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது.

இதுகுறித்து சேலம் சூரமங்கலம் மீன் வியாபாரிகள் நல சங்கத்தின் தலைவர் முகமது அலி கூறும்போது,‘ கடந்த 50 நாட்களுக்கு பின்பு தற்போது தான் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மீன் விற்பனை நடைபெற்று வருகிறது. அரசு விதித்த விதிமுறைகளை நாங்கள் முறையாக கடைபிடித்து வருகிறோம். கடந்த வாரத்தை விட தற்போது மீன் விலை உயர்ந்துள்ளது. சேலம் சூரமங்கலம் மீன் மார்க்கெட்டில் மட்டும் நேற்று ஒரே நாளில் சுமார் 15 டன் மீன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது’ என்றார்.

Next Story