கோடை மழையால் பசுமைக்கு திரும்பிய முதுமலை புலிகள் காப்பகம் சாலையோரங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிப்பு


கோடை மழையால் பசுமைக்கு திரும்பிய முதுமலை புலிகள் காப்பகம்  சாலையோரங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிப்பு
x
தினத்தந்தி 26 May 2020 1:33 AM GMT (Updated: 26 May 2020 1:33 AM GMT)

கோடை மழையால் முதுமலை புலிகள் காப்பகம் பசுமைக்கு திரும்பி உள்ளது. மேலும் சாலையோரங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.

கூடலூர்,

நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் முதுமலை பகுதிகளில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை கடுமையாக வெயில் அடித்தது. இதனால் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் வறட்சி நிலவியது. இங்கு காட்டுயானைகள், காட்டெருமைகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு பசுந்தீவன தட்டுப்பாடு ஏற்பட்டது. மேலும் நீர்நிலைகள் வறண்டுவிட்டதால் தீவனம் மற்றும் தண்ணீரை தேடி வனவிலங்குகள் ஊருக்குள் படையெடுக்க தொடங்கின.

இதற்கிடையில் வனத்துக்குள் அமைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் லாரிகள் மூலம் வனத்துறையினர் தண்ணீர் ஊற்றி வனவிலங்குகளின் தாகத்தை தணித்து வந்தனர். எனினும் தீவன தட்டுப்பாட்டால் வனவிலங்குகள் இடம் பெயர்ந்து சென்றன. இதனால் முதுமலையில் வனவிலங்குகளின் நடமாட்டம் குறைவாக காணப்பட்டது.

பசுமைக்கு திரும்பிய வனப்பகுதி

இது தவிர காட்டுயானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் முதுமலை புலிகள் காப்பக எல்லையில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து பயிர்களை தின்று அட்டகாசம் செய்தன. மேலும் குடியிருப்புகளையும் சேதப்படுத்தின. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். ஏற்கனவே ஊரடங்கு உத்தரவால் வருமானமின்றி அவதிப்பட்ட அவர்களுக்கு, இது மேலும் பெரிய தலைவலியாக அமைந்தது.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக கூடலூர் மற்றும் முதுமலை பகுதிகளில் கோடை மழை பெய்து வருகிறது. சில நேரங்களில் பலத்த மழையும் கொட்டுகிறது. இதன் காரணமாக முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள 40-க்கும் மேற்பட்ட நீர்நிலைகளில் தண்ணீர் நிறைந்து காணப்படுகிறது. இதன் காரணமாக வனப்பகுதி பசுமைக்கு திரும்பி உள்ளது.

நடமாட்டம் அதிகரிப்பு

இதைத்தொடர்ந்து இடம்பெயர்ந்து சென்ற வனவிலங்குகள் மீண்டும் முதுமலை வனப்பகுதிக்கு வர தொடங்கி உள்ளன. இதன் காரணமாக அங்குள்ள சாலையோரங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து இருப்பதை காண முடிகிறது. ஊரடங்கு உத்தரவால் வாகன போக்குவரத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளதால், பெரும்பாலும் சாலைகள் வெறிச்சோடியே கிடக்கின்றன. இதனால் எந்தவித இடையூறும் இன்றி குறிப்பாக மான்கள் கூட்டம் சாலையோரங்களில் உள்ள புல்வெளிகளில் மேய்வதை அதிகமாக காண முடிகிறது.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, முதுமலை புலிகள் காப்பகம் தொடர் மழையால் பசுமையாக காட்சி அளிக்கிறது. இதனால் வனவிலங்குளின் நடமாட்டமும் அதிகரித்து உள்ளது. ஆனால் ஊரடங்கால் சுற்றுலா பயணிகள் வருகை இல்லை. வழக்கமாக சுற்றுலா பயணிகள் வருகை தரும் காலத்தில் வனவிலங்குகளுக்கு இடையூறுகள் ஏற்படும். தற்போது அதுபோன்ற பிரச்சினைகள் இல்லை என்றனர்.

Next Story