விலை உயர்வால் கடும் அதிருப்தி: புதுவையில் மது விற்பனை மந்தம்


விலை உயர்வால் கடும் அதிருப்தி: புதுவையில் மது விற்பனை மந்தம்
x
தினத்தந்தி 27 May 2020 12:13 AM GMT (Updated: 27 May 2020 12:13 AM GMT)

விலை உயர்வால் புதுச்சேரியில் மதுக்கடைகள் திறக்கப்பட்ட 2-வது நாளான நேற்று மது விற்பனை மந்தமாக இருந்தது. மது பிரியர்கள் எதிர்பார்த்த அளவுக்கு வராததால் கடை உரிமையாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

புதுச்சேரி,

கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் தற்போது பல்வேறு தளர்வுகளுடன் 4-ம் கட்டமாக வருகிற 31-ந் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரியில் வணிக வளாகங்கள், தியேட்டர்கள் தவிர கடைகள், ஓட்டல்களை இரவு 7 மணிவரை திறந்து வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன் தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இதை பின்பற்றி புதுச்சேரியிலும் மதுக்கடைகளை திறக்க அரசு விரும்பியது. இதுகுறித்து அமைச்சரவையில் முடிவு செய்து கோவிட் வரி விதித்து அதற்கான கோப்பை ஒப்புதலுக்காக கவர்னர் கிரண்பெடிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் தமிழகத்துக்கு நிகராக மது வகைகளின் விலையை உயர்த்துமாறு கவர்னர் வலியுறுத்தியதையடுத்து மதுக்கடை திறப்பு இழுபறியானது.

இந்தநிலையில் மது விலையை உயர்த்தி புதிதாக அனுப்பி வைத்த கோப்புக்கு கவர்னர் கிரண்பெடி ஒப்புதல் அளித்தார். அதன்படி ஊரடங்கின் போது முறைகேடாக மது விற்பனையில் ஈடுபட்ட 102 கடைகள் தவிர மற்ற மதுக்கடைகள் நேற்று முன்தினம் திறக்கப்பட்டன. முதல் நாள் என்பதால் மதுக்கடைகளில் மது பிரியர்கள் நீண்ட வரிசையில் நின்று மது வகைகளை வாங்கிச் சென்றனர். ஆனால் அவர்கள் மது வகைகளின் விலை உயர்வு குறித்து கடும் அதிருப்தி தெரிவித்தனர்.

இதன் எதிரொலியாக 2-வது நாளான நேற்று மது பிரியர்கள் வராததால் பெரும்பாலான மதுக்கடைகள் வெறிச்சோடின. சொற்ப எண்ணிக்கையிலேயே மது பிரியர்கள் மது வகைகளை வாங்கிச் சென்றனர். வழக்கத்தை விட இரு மடங்கு மது பானங்களின் விலை உயர்த்தப்பட்டது. மது பிரியர்களின் கூட்டம் எதிர்பார்த்த அளவுக்கு வராததால் மது விற்பனை மந்தமாக இருந்தது.

சாதாரணமாக ஒரு நாளில் புதுச்சேரி மதுபான கடைகளில் ரூ.3 கோடி, காரைக்காலில் ரூ.ஒரு கோடி, மாகியில் ரூ.65 லட்சம், ஏனாமில் ரூ.35 லட்சம் என மாநிலம் முழுவதும் ரூ.5 கோடிக்கு மேல் மது வகைகள் விற்பனையாகும். இதன் மூலம் அரசுக்கு ரூ.ஒரு கோடிக்கு மேல் வருவாய் கிடைத்து வந்தது. ஆனால் தற்போது மது வகைகளின் விலை உயர்த்தப்பட்டதால் விற்பனை கடும் சரிவை சந்தித்து மதுக்கடை உரிமையாளர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இதுகுறித்து மதுக்கடை உரிமையாளர் ஒருவர் கூறுகையில், வார வேலை நாட்களில் எனது கடையில் மட்டும் ரூ.2 லட்சம் வரை தினமும் மதுபானம் விற்பனை யாகும். வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சராசரியாக ரூ.3 லட்சத்திற்கு விற்பனை நடக்கும். மதுக்கடை திறக்கப்பட்ட முதல் நாள் என்பதால் நேற்று முன்தினம் எனது கடையில் ரூ.4 லட்சத்திற்கு மதுபானம் விற்பனையானது. ஆனால் நேற்று ஒரு லட்சத்திற்கு கூட மதுபானம் விற்பனை ஆகவில்லை. மதுபானங்களின் கடுமையான விலை உயர்வே இதற்கு காரணம். விலையை குறைப்பதன் மூலமே மது விற்பனை பழைய நிலைக்கு திரும்பும். தற்போதைய நிலை நீடித்தால் அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்படும்’ என்றார்.

ஒரேநாளில் ரூ.3¾ கோடிக்கு விற்பனை

புதுவையில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை மதுக்கடைகளை திறந்து வைத்து விற்பனை செய்ய கலால் துறை அனுமதி அளித்துள்ளது. அதேநேரத்தில் மதுபானங்களின் விற்பனை விவரங்களை மறுநாள் கலால் துறையில் தெரிவித்து கோவிட் வரியை செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. மதுக்கடைகள் திறக்கப்பட்ட முதல் நாளான நேற்று முன்தினம் மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. விலை உயர்வு காரணமாக 2-வது நாளான நேற்று எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் இல்லை. புதுவை மற்றும் காரைக்காலில் நேற்று முன்தினம் ஒரேநாளில் ரூ.3 கோடியே 83 லட்சத்திற்கு மதுபானம் விற்பனை ஆனது. நேற்று மதியம் 2 மணி நிலவரப்படி புதுவை, காரைக்காலை சேர்த்து ரூ.1 கோடியே 14 லட்சத்திற்கு மதுபானம் விற்பனையாகி இருப்பதாக கலால் துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.

Next Story