திருப்பூர் மாவட்டத்தில் 5 மையங்களில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடக்கம் 1,687 ஆசிரியர்கள் ஈடுபடுகிறார்கள்


திருப்பூர் மாவட்டத்தில் 5 மையங்களில்  பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடக்கம்  1,687 ஆசிரியர்கள் ஈடுபடுகிறார்கள்
x
தினத்தந்தி 27 May 2020 12:51 AM GMT (Updated: 27 May 2020 12:51 AM GMT)

திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி 5 மையங்களில் இன்று(புதன்கிழமை) தொடங்குகிறது. இந்த பணியில் 1,687 ஆசிரியர்கள் ஈடுபடுகிறார்கள்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் நடைபெற்ற மேல்நிலை பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று(புதன்கிழமை) முதல் திருப்பூர் தாராபுரம் ரோட்டில் உள்ள கே.செட்டிப்பாளையம் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, செஞ்சுரி பவுண்டேசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தி பிரண்ட்லைன் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தாராபுரத்தில் விவேகம் மேல்நிலைப்பள்ளி, உடுமலையில் ஆர்.ஜி.எம்.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி என 5 மையங்களில் நடைபெற உள்ளது.

இந்தநிலையில் செஞ்சுரி பவுண்டேசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விடைத்தாள் திருத்தும் பணிக்கு மேற்கொள்ளப்பட்ட முன்னேற்பாடுகள் குறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

1,687 ஆசிரியர்கள்

பின்னர் அவர் கூறியதாவது-

பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் மையங்களில் பணிபுரியும் வெளிமாவட்டத்தில் தங்கியுள்ள நமது மாவட்ட பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு சென்று வர போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளன. ஒண்டிப்புதூர், காந்திபுரம், புளியம்பட்டி, குன்னத்தூர், பல்லடம், ஈரோடு, மேட்டுப்பாளையம், பழனி, கரூர், ஒட்டன்சத்திரம், காங்கேயம், கொடுவாய், பழனி ஆகிய இடங்களில் இருந்து மொத்தம் 16 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

இந்த பணியில் முதன்மை தேர்வாளராக 200 பேரும், கூர்ந்தாய்வு அலுவலராக 200 பேரும், உதவி தேர்வாளராக 1,200 பேரும், 87 அலுவலக பணியாளர்கள் என 1,687 பேர் ஈடுபட உள்ளனர். ஒரு வகுப்பறையில் ஒரு முதன்மை தேர்வர், ஒரு கூர்ந்தாய்வு அலுவலர், 6 உதவி தேர்வாளர் என மொத்தம் 8 பேர் மட்டுமே பணியாற்றுவார்கள். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிருமிநாசினி தெளிப்பு மற்றும் கைகளை சுத்தப்படுத்தும் வகையில் தேவையான பொருட்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அரசு அனுமதித்துள்ள அளவில் பஸ்சில் ஆசிரியர்கள் அழைத்து வரப்படுவார்கள். இந்த மையங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் முககவசம் வழங்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ரமேஷ்குமார், பள்ளி முதல்வர் ரேணுகா, தெற்கு தாசில்தார் சுந்தரம் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story