100 இடங்களில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


100 இடங்களில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 28 May 2020 5:33 AM GMT (Updated: 28 May 2020 5:33 AM GMT)

கடலூர் மாவட்டத்தில் 100 இடங்களில் விவசாயிகள் சங்கத்தினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர்,

விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் வங்கியில் பெற்றுள்ள அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாய பணிகளை தொடங்குவதற்கு உதவியாக நிபந்தனையின்றி புதிய கடன்கள் வழங்க வேண்டும். இலவச மின்சாரத்தை பறிக்கும் மின்சார திருத்தச்சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்.

விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பயிர்காப்பீட்டு பாக்கி தொகையை உடனடியாக வழங்க வேண்டும். கொரோனா கால உதவியாக சிறு, குறு விவசாயிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் ஜவான் பவன் சாலை அருகில் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கோ.மாதவன் தலைமை தாங்கினார். பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் பழனி, சுமை தூக்கும் தொழிலாளர் சங்க தலைவர் சுப்பராயன், கட்டுமான சங்கத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

இதேபோல் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சிறுபாக்கம் பஸ்நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு சங்க வட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் ராமலிங்கம், அழகுவேல், தமிழ்ச்செல்வன், குமார், பாண்டுரங்கன், முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டு, விவசாய பம்பு செட்டுகளில் மீட்டர் பொருத்துவதை தடை செய்ய வேண்டும், விவசாயிகளின் கடனை ரத்து செய்ய வேண்டும் என கோஷம் எழுப்பினர்.

புவனகிரி பகுதியில் உள்ள வாய்க்கால்களை குடிமராமத்து பணி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புவனகிரி ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் புவனகிரி தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட குழு உறுப்பினர் சதானந்தம் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் காளி கோவிந்தராஜ், அருளானந்தம், அருள்மணி, மணவாளன், கதிர்வேல், ஸ்டாலின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சிதம்பரம் சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு விவசாய சங்க மாவட்ட செயலாளர் வி.எம்.சேகர் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் தமிமுன் அன்சாரி, வட்ட செயலாளர் அன்பழகன், வட்ட குழு உறுப்பினர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர்.

காட்டுமன்னார்கோவில் தாலுகா அலுவலகம் முன்பு விவசாயிகள் சங்க தலைவர் இளங்கீரன் தலைமையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதையடுத்து அவர்கள் வீராணந்தபுரத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டுள்ள இடத்தில் மாலை அணிவித்து ஒப்பாரி வைத்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சி விவசாயிகள் சங்க மாநில தலைவர் பசுமை வளவன், தமிழ்நாடு விவசாய சங்க தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல், மேல்அழிஞ்சிப்பட்டு, நடுவீரப்பட்டு உள்பட மாவட்டம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே மாவட்டம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்கத்தை சேர்ந்த 74 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Next Story