திருப்பூர் அரசு மருத்துவமனையில் 2 சிறுமி உள்பட 5 பேருக்கு கொரோனா பரிசோதனை


திருப்பூர் அரசு மருத்துவமனையில் 2 சிறுமி உள்பட 5 பேருக்கு கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 28 May 2020 9:44 PM GMT (Updated: 28 May 2020 9:44 PM GMT)

திருப்பூர் அரசு மருத்துவமனையில் 2 சிறுமி உள்பட 5 பேருக்கு நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.



திருப்பூர்,

திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள், கொரோனா சந்தேகம் ஏற்படுகிறவர்கள் என பலரும் சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள். இவ்வாறு வருகிறவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த கொரோனா பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படுகிறவர்கள், மேல்சிகிச்சைக்காக கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்படுகிறார்கள். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்து, வீடு திரும்புகிறார்கள். தற்போது கடந்த 2-ந் தேதிக்கு பிறகு திருப்பூர் மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா தொற்று புதியதாக ஏற்படவில்லை. இதனால் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக திருப்பூர் இருந்து வருகிறது.

5 பேருக்கு...

இந்த நிலையில் திருப்பூர் அரசு மருத்துவமனையில் நேற்று சந்தேகத்தின் திருப்பூர் மங்கலம் ரோடு பகுதியை சேர்ந்த 47 வயது ஆண், போயம்பாளையத்தை சேர்ந்த 37 வயது ஆண், பூலுவப்பட்டி பிரிவை சேர்ந்த 16 வயது சிறுமி, சோழிபாளையத்தை சேர்ந்த 29 வயது பெண், திருமுருகன்பூண்டி வெங்கமேட்டை சேர்ந்த 17 வயது சிறுமி ஆகிய 5 பேருக்கு கொரோனா பரிசோதனை (ஸ்வாப் பரிசோதனை) செய்யப்பட்டுள்ளது. அவர்களது சளி மற்றும் ரத்த மாதிரியும் சேகரிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான பரிசோதனை முடிவுகள் விரைவில் தெரியவரும்.

இதில் கொரோனா தொற்று இருப்பவர்கள் மேல்சிகிச்சைக்காக கோவை இ.எஸ்.ஐ. அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி டாக்டர்கள் தெரிவித்தனர். இதில் ஒருவர் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருபவர். மீதமுள்ள 4 பேர் வீட்டு கண்காணிப்பில் இருப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story