வேறு பெண்ணை காதலன் திருமணம் செய்து கொண்டதால் முதுகலை பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை


வேறு பெண்ணை காதலன் திருமணம் செய்து கொண்டதால் முதுகலை பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 28 May 2020 11:12 PM GMT (Updated: 28 May 2020 11:12 PM GMT)

ஒரத்தநாடு அருகே காதலன் வேறு பெண்ணை திருமணம் செய்ததால் மன வேதனை அடைந்த முதுகலை பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஒரத்தநாடு, 

ஒரத்தநாடு அருகே காதலன் வேறு பெண்ணை திருமணம் செய்ததால் மன வேதனை அடைந்த முதுகலை பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை காதலன் வீட்டு முன்பு வைத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

முதுகலை பட்டதாரி பெண்

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஆவிடநல்லவிஜயபுரம் சோழகன்குடிக்காடு நடுத்தெருவை சேர்ந்தவர் செல்வம். இவருடைய மகள் அருணா(வயது 24). எம்.சி.ஏ. பட்டதாரி. இவரும் சோழகன்குடிக்காடு கீழத்தெருவை சேர்ந்த அர்ச்சுனன் மகன் புகழரசன்(30) என்பவரும் உறவினர்கள். இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

இந்த நிலையில் புகழரசன் வெளிநாட்டுக்கு சென்றார். அங்கிருந்து அவர் தனது காதலி அருணாவுடன் செல்போனில் பேசி வந்தார். இதனிடையே புகழரசனின் குடும்பத்தினர் அவருக்கு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய நிச்சயித்தனர். இதனால் ஏமாற்றம் அடைந்த அருணா, பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் புகழரசன், அவரது தந்தை அர்ச்சுனன், தாயார் பத்மாவதி ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

தர்ணா போராட்டம்

இந்த நிலையில் புகழரசன் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்து விட்டதாகவும், பெற்றோர் நிச்சயம் செய்துள்ள பெண்ணை அவர் திருமணம் செய்ய முயற்சிப்பதாகவும் கூறி கடந்த பிப்ரவரி மாதம் 15-ந் தேதி அருணா தனது உறவினர்களுடன் புகழரசனின் வீட்டுக்கு சென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது விசாரணை மேற்கொண்ட போலீசாரிடம் அருணா, ‘புகழரசன் உறவுக்காரர் என்பதால் அவரை நம்பி காதலித்தேன். அவர் அழைத்த இடங்களுக்கெல்லாம் சென்றேன். சென்னை வடபழனி முருகன் கோவிலில் நாங்கள் இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டோம். ஆனால் புகழரசனும், அவரது குடும்பத்தினரும் என்னை ஏமாற்ற முயற்சிக்கின்றனர். புகழரசனுடன் நான் சேர்ந்து வாழ போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் என் வாழ்க்கையை முடித்துக்கொள்வதை தவிர வேறு வழியில்லை’ என்று கண்ணீர் மல்க தெரிவித்தார். இதனை தொடர்ந்து அருணாவை போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

தூக்குப்போட்டு தற்கொலை

இந்த நிலையில் நிச்சயம் செய்திருந்த பெண்ணை புகழரசன் நேற்று முன்தினம் பட்டுக்கோட்டை முருகன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இதன்பிறகு அருணாவிடம் புகழரசன், ‘உன் எதிர்ப்பையும் மீறி நிச்சயித்த பெண்ணை நான் திருமணம் செய்து விட்டேன்’ என்று செல்போனில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனை அடைந்த அருணா தனது வீட்டின் குளியலறையில் நேற்று காலை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதன் காரணமாக அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரின் உடலை எடுத்துச்சென்று புகழரசன் வீட்டின் முன்பு வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது புகழரசனையும், அவர் திருமணம் செய்து கொண்ட பெண்ணையும் சிலர் தாக்கினர். புகழரசனின் வீட்டு கண்ணாடி சேதப்படுத்தப்பட்டது.

6 பேர் மீது வழக்கு

இதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற ஒரத்தநாடு துணை போலீஸ் சூப்பிரண்டு செங்கமலக்கண்ணன், தாசில்தார் அருள்ராஜ் ஆகியோர் அருணாவின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அருணாவின் உடலை கைப்பற்றி ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து அருணாவின் தந்தை செல்வம் அளித்த புகாரின் பேரில் பாப்பாநாடு போலீசார் பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக புகழரசன், அவரது தந்தை அர்ச்சுனன், தாயார் பத்மாவதி உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதால் மன வேதனை அடைந்த முதுகலை பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒரத்தநாடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story