தனியார் நிறுவன ஊழியருக்கு கொரோனா; கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதி


தனியார் நிறுவன ஊழியருக்கு கொரோனா; கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதி
x
தினத்தந்தி 29 May 2020 1:17 AM GMT (Updated: 29 May 2020 1:17 AM GMT)

தேன்கனிக்கோட்டை அருகே தனியார் நிறுவன ஊழியருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தேன்கனிக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா இருதுகோட்டை அருகே உள்ள அனுமந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவர் 34 வயது ஆண். இவர் காஞ்சீபுரம் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 5 நாட்களுக்கு முன்பு கார் மூலம் தனது சொந்த ஊரான அனுமந்தபுரத்திற்கு வந்தார். அவருக்கு சளி, இருமல் இருந்தது.

இந்த நிலையில் அவர் வெளியூரில் இருந்து வந்த தகவல் அறிந்து கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் கோவிந்தன், தேன்கனிக்கோட்டை தாசில்தார் ராமச்சந்திரன், கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ்குமார் மற்றும் மருத்துவ குழுவினர் அவரது வீட்டிற்கு சென்றனர்.

அவரது சளி, ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன. இந்த பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் நேற்று சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவரது வீட்டில் இருந்த 6 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 21 பேர் குணமடைந்துள்ளனர். ஏற்கனவே 7 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தற்போது தனியார் நிறுவன ஊழியரும் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். மாவட்டத்தில் தற்போதைய நிலவரப்படி 8 பேர் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Next Story