மராட்டியத்தில் இருந்து வந்தவர்களால் அதிகரிப்பு: நெல்லை, தூத்துக்குடியில் கொரோனா பாதிப்பு 544 ஆக உயர்வு


மராட்டியத்தில் இருந்து வந்தவர்களால் அதிகரிப்பு: நெல்லை, தூத்துக்குடியில் கொரோனா பாதிப்பு 544 ஆக உயர்வு
x
தினத்தந்தி 30 May 2020 1:56 AM GMT (Updated: 30 May 2020 1:56 AM GMT)

நெல்லை, தூத்துக்குடியில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 544 ஆக உயர்ந்து உள்ளது.

நெல்லை,

நெல்லை, தூத்துக்குடியில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 544 ஆக உயர்ந்து உள்ளது. தென்காசியில் புதிதாக தொற்று இல்லை.

16 பேருக்கு கொரோனா

கொரோனா வைரஸ் பரவலின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நெல்லை மாவட்டத்துக்கு மராட்டிய மாநிலம் மும்பை பகுதியில் இருந்து வருவோரால் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே 330 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் நேற்று மேலும் 15 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. இதில் 11 பேர் மராட்டிய மாநிலத்தில் இருந்து வந்தவர்கள். 4 பேர் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இவர்களில் 6 பேர் பெண்கள். இதில் 2 வயது சிறுமியும் அடங்குவார். இவர்கள் அனைவரும் நெல்லை அரசு ஆஸ்பத்திரி கொரோனா சிறப்பு வார்டில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர். நேற்றுடன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 345 ஆக அதிகரித்து உள்ளது. இதில் 167 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். ஒருவர் இறந்து விட்டார். மீதி 177 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தூத்துக்குடியில் ஒருவர் பாதிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் வரை 198 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இவர்களில் 104 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 2 பேர் இறந்து உள்ளனர்.

இந்த நிலையில் மராட்டிய மாநிலம் மும்பையில் இருந்து கோவில்பட்டிக்கு வந்த ஒருவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக் கப்பட்டவர்களின் எண்ணிக்கை 199 ஆக உயர்ந்து உள்ளது. நெல்லை, தூத்துக் குடி ஆகிய இரு மாவட்டங்களையும் சேர்த்து கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 544 ஆக அதிகரித்து இருக்கிறது.

தென்காசியில் தொற்று இல்லை

தென்காசி மாவட்டத்தில் நேற்று புதிதாக யாருக்கும் தொற்று இல்லை. இதனால் அங்கு கடந்த 6 நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 85 ஆக நீடித்து வருகிறது. அந்த மாவட்டத்தை சேர்ந்த 5 பேர் நேற்று ஆஸ்பத்திரியில் இருந்து குணமாகி வீடு திரும்பினார்கள். இன்னும் 24 பேர் நெல்லை, தென்காசி அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Next Story