சிறுநீரகத்தை ரூ.1 கோடிக்கு வாங்குவதாக கூறி தனியார் வங்கி பெண் ஊழியரிடம் ரூ.3.14 லட்சம் மோசடி - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


சிறுநீரகத்தை ரூ.1 கோடிக்கு வாங்குவதாக கூறி தனியார் வங்கி பெண் ஊழியரிடம் ரூ.3.14 லட்சம் மோசடி - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 31 May 2020 9:30 PM GMT (Updated: 31 May 2020 8:08 PM GMT)

பெங்களூருவில் சிறுநீரகத்தை ரூ.1 கோடிக்கு வாங்குவதாக கூறி தனியார் வங்கி பெண் ஊழியரிடம் ரூ.3.14 லட்சம் பெற்று மோசடி செய்த சம்பவம் நடந்துள்ளது. இதில், தொடர்புடைய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

பெங்களூரு,

பெங்களூரு மூடலபாளையா அருகே 25 வயது பெண் வசித்து வருகிறார். இவர், தனியார் வங்கியில் ஊழியராக பணியாற்றுகிறார். ஊரடங்கு காரணமாக அந்த பெண்ணுக்கும், அவரது குடும்பத்திற்கும் பணப்பிரச்சினை ஏற்பட்டது. இதனால் குடும்பத்தில் உள்ள பணப்பிரச்சினையை தீர்க்க தனது சிறுநீரகத்தை விற்பனை செய்ய அப்பெண் முடிவு செய்தார். இதுதொடர்பாக அவர் இணையதளத்தில் சிறுநீரகத்தை வாங்க யாரும் உள்ளார்களா? என்று தேடிப்பார்த்தார்.

அப்போது சிறுநீரகம் தானம் செய்பவர்களுக்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என்று இணையதளத்தில் ஒரு விளம்பரம் இருப்பதை பார்த்து அந்த பெண் மகிழ்ச்சி அடைந்தார். தனக்கு இருக்கும் பணப்பிரச்சினையை சமாளிக்க தனது சிறுநீரகத்தை விற்றால் ரூ.1 கோடி கிடைக்கும் என்று அந்த பெண் கருதினார். இதையடுத்து, அந்த விளம்பரத்தில் இருந்த செல்போன் எண்ணுக்கு அவர் தொடர்பு கொண்டு பேசினார்.

அப்போது பேசிய மர்மநபர்கள், சிறுநீரகத்தை வாங்க தயாராக இருக்கிறோம், ஆனால் அரசின் சட்டவிதிமுறைகளின்படி தான் வாங்குவோம் என்று கூறினார்கள். இதற்கு அந்த பெண்ணும் சம்மதித்தார். மேலும் சிறுநீரகத்தை விற்க அரசு மற்றும் போலீசாரின் அனுமதி பெறுவதற்கு, அறுவை சிகிச்சை செய்வதற்கு, மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ள முன்கூட்டியே பணம் செலுத்த வேண்டும் என்று மர்மநபர்கள் அந்த பெண்ணிடம் கூறியுள்ளனர். அதன்படி, குறுப்பிட்ட இடைவெளியில் தன்னிடம் இருந்த தங்க நகைகள், உறவினர்களிடம் கடன் வாங்கியும் ரூ.3 லட்சத்து 14 ஆயிரத்தை மர்மநபர்கள் கூறிய வங்கி கணக்குக்கு அந்த பெண் அனுப்பி வைத்திருந்தார்.

இந்த நிலையில், பணத்தை வாங்கிய மர்மநபர்களின் செல்போன் எண் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டுள்ளது. அந்த நபர்களை, அப்பெண்ணால் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. இதனால் மர்மநபர்கள் தன்னிடம் ரூ.3.14 லட்சம் வாங்கி மோசடி செய்வதுவிட்டதை அந்த பெண் உணர்ந்தார். இதுகுறித்து மேற்கு மண்டல சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் பெண் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடிவருகிறார்கள்.

Next Story