வெளி மாநிலங்களில் இருந்து சேலம் வந்த 36 பேர் உள்பட 49 பேருக்கு கொரோனா


வெளி மாநிலங்களில் இருந்து சேலம் வந்த 36 பேர் உள்பட 49 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 1 Jun 2020 2:41 AM GMT (Updated: 1 Jun 2020 2:41 AM GMT)

வெளி மாநிலங்களில் இருந்து சேலம் வந்த 36 பேர் உள்பட மொத்தம் 49 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சேலம்,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் நபர்கள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு அவர்களுக்கு நோய் தொற்று பாதிப்பு இருக்கும் பட்சத்தில் அவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதேசமயம் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் குணமடைந்து அவ்வப்போது அவர்கள் வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர்.

இதனிடையே, நேற்று முன்தினம் வெளிமாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து சேலம் வந்த 2 குழந்தைகள் உள்பட 36 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இந்தநிலையில் சேலத்தில் நேற்று மேலும் 49 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது, மராட்டிய மாநிலத்தில் இருந்து வந்த 25 பேர், ஒடிசா மாநிலத்தில் இருந்து வந்த 3 பேர், கர்நாடகாவில் இருந்து வந்த 2 பேர் மற்றும் ராஜஸ்தான், ஆந்திரா, ஜார்கண்ட், அரியானா, புதுச்சேரி, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் வீதம் மொத்தம் 36 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் சேலம் மாநகரில் அழகாபுரம், கொண்டலாம்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 13 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்த பாதிப்பு உள்ள 49 பேரில் 3 வயது சிறுமி, 9 வயது சிறுவன், 10 வயது சிறுவனும் அடங்குவர்.

சேலம் மாநகரம் மற்றும் மாவட்டங்களில் நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் வீடுகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுகாதாரத்துறை மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் சேலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 193 ஆக உயர்ந்துள்ளது.

Next Story