மகனால் வீட்டை விட்டு துரத்தப்பட்ட மூதாட்டி - ரெயில்வே போலீசார் உதவியால் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்


மகனால் வீட்டை விட்டு துரத்தப்பட்ட மூதாட்டி - ரெயில்வே போலீசார் உதவியால் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்
x
தினத்தந்தி 2 Jun 2020 12:38 AM GMT (Updated: 2 Jun 2020 12:38 AM GMT)

மகனால் வீட்டை விட்டு துரத்தப்பட்ட மூதாட்டி ரெயில்வே போலீசார் உதவியால் டெல்லிக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டார்.

மும்பை,

டெல்லியை சேர்ந்த மூதாட்டி லீலாவதி துபே (வயது70) இவரது கணவர் கடந்த டிசம்பர் மாதம் உயிரிழந்ததை அடுத்து டெல்லியில் உள்ள மூத்த மகன் வீட்டில் வசித்து வந்தார். இதன்பின்னர் மும்பையில் வசிக்கும் இளைய மகன் வீட்டிற்கு கடந்த 4 மாதத்துக்கு முன்பு வந்திருந்தார்.

மும்பை வந்த மூதாட்டி லீலாவதி துபேவிற்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது இளைய மகன் மூதாட்டியிடம் டெல்லிக்கு செல்லும்படி கூறி வீட்டில் இருந்து அடித்து துரத்தி விட்டார். இதனால் லீலாவதி துபே உதவிக்கு யாரும் இல்லாததால் தனியாக பாந்திரா ரெயில் டெர்மினலுக்கு வந்து ரெயிலுக்காக காத்து இருந்தார்.

24 மணி நேரமாக பட்டினியுடன் அங்குள்ள மரத்தடியில் கிடந்து உள்ளார். இதனை கண்ட பாந்திரா ரெயில்வே போலீசார் லீலாவதி துபேவை மீட்டு விசாரணை நடத்தினர்.

இதில் இளைய மகன் வீட்டை வீட்டு துரத்தியதால் டெல்லிக்கு செல்ல இருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து ரெயில்வே போலீசார் அவருக்கு உணவு வழங்கி ஆசுவாசப்படுத்தினர். பின்னர் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயிலில் டிக்கெட் மற்றும் ரெயில்வே போலீசார் தங்களது கையில் இருந்த ரூ.7 ஆயிரத்து 600-ஐ மூதாட்டியிடம் கொடுத்தனர்.

பின்னர் மும்பை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில் ஏற்றி அனுப்பி வைத்தனர். பின்னர் டெல்லி ரெயில்வே போலீசாரை தொடர்பு கொண்டு மூதாட்டியை காரில் கொண்டு போய் வீட்டிற்கு சென்று விட்டு விடும்படி தெரிவித்தனர்.

இது பற்றி மேற்கு ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி ரவீந்தர்பாகர் கூறுகையில், மனிதாபிமான அடிப்படையில் நாங்கள் இதனை செய்ததாகவும், இது எங்களுக்கு கிடைத்த வாய்ப்பாக கருதுகிறோம் எனவும் தெரிவித்தார்.

Next Story