ஈரோடு மாவட்ட கொரோனா பட்டியலில் மேலும் 2 பேர் சேர்ப்பு


ஈரோடு மாவட்ட கொரோனா பட்டியலில் மேலும் 2 பேர் சேர்ப்பு
x
தினத்தந்தி 3 Jun 2020 6:22 AM GMT (Updated: 3 Jun 2020 6:22 AM GMT)

ஈரோடு மாவட்ட கொரோனா பாதிப்பு பட்டியலில் மேலும் 2 பேர் சேர்க்கப்பட்டு உள்ளனர். இவர்கள் சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் வசித்து வருபவர்கள் ஆவர்.

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட முதல் கட்டத்தில் 70 பேர் பாதிக்கப்பட்டனர். இவர்களில் ஒருவர் உயிரிழந்தார். 69 பேர் முற்றிலும் குணமாகி தங்கள் வீடுகளுக்கு சென்றனர். அதைத்தொடர்ந்து சுமார் 35 நாட்கள் எந்த ஒரு புதிய கொரோனா வைரஸ் தொற்றும் இல்லாமல் ஈரோடு மாவட்டம் பச்சை மண்டல மாவட்டமாக இருந்தது.

கவுந்தப்பாடியை சேர்ந்த ஒருவருக்கு திடீர் என்று கொரோனா உறுதி செய்யப்பட்டது. அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சென்றபோது கொரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆனால், அவர் நடமாடிய பகுதிகளில் முழுமையான பரிசோதனை நடத்தியபோது சமூக பரவல் இல்லை என்று கண்டறியப்பட்டது. அதுமட்டுமின்றி அவரும் குணமாகி தற்போது வீடு சென்று உள்ளார்.

சென்னையில் இருந்து வந்த சூளை பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு சேலம் விமான நிலையத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி சிறப்பு கொரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடன் ஈரோட்டில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72 ஆக இருந்தது.

இதற்கிடையே கொடுமுடியை சேர்ந்த ஒருவர் வடமாநிலத்தில் இருந்து திரும்பினார். அவருக்கு கோவை விமான நிலைய பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், அவரது பெயர் தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் சேர்க்கப்படவில்லை. ஆனால், இவர் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வருகிறார்.

இந்தநிலையில் நேற்று ஈரோட்டை சேர்ந்த 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்களில் ஆண் ஒருவர் சென்னையில் வசித்து வந்தார். பெருந்துறை பகுதியை சேர்ந்த அவர் ஈரோட்டில் இருந்து சென்று ஒரு ஆண்டுக்கு மேல் ஆகிவிட்டது. விமானம் மூலம் கோவை வந்த அவருக்கு செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் கோவையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இன்னொரு பெண் ஈரோடு மாநகராட்சி பகுதியை சேர்ந்தவர். இவர் 3 மாதங்களுக்கு முன்னதாகவே செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சகோதரியின் வீட்டுக்கு சென்று விட்டார். அங்கு செய்யப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் 2 பேரும் ஈரோடு மாவட்ட முகவரியை தங்கள் பரிசோதனையின் போது வழங்கியதால், ஈரோடு மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று என்று மாநில பட்டியலில் பதிவிடப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் 74 பேர் என நேற்று பட்டியலிடப்பட்டு உள்ளது. இதில் ஒருவர் இறந்து விட்டார். 70 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். 3 பேர் சிகிச்சையில் இருந்து வருகிறார்கள்.

கொரோனா தொற்று கண்டறியப்படும் ஒருவர் கடைசி 14 நாட்கள் எங்கே இருந்தாரோ, அந்த மாவட்டத்தில்தான் அவரது பாதிப்பு எண்ணிக்கை பட்டியல் இடப்பட வேண்டும் என்ற நிலை உள்ளது. எனவே நேற்று ஈரோடு மாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்ட 2 பேரும் ஈரோடு மாவட்டத்தில் இருந்து சென்று 3 மாதங்களுக்கும் மேல் ஆகி விட்டது. மேலும் அவர்களில் ஒருவர் கோவையிலும், ஒருவர் செங்கல்பட்டிலும் இருக்கிறார்கள். எனவே அவர்களின் பெயர் ஈரோடு மாவட்ட பட்டியலில் இருந்து அகற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story