கிருஷ்ணகிரியில் பயங்கரம்: தனியார் நிறுவன ஊழியர் கொடூரக் கொலை


கிருஷ்ணகிரியில் பயங்கரம்: தனியார் நிறுவன ஊழியர் கொடூரக் கொலை
x
தினத்தந்தி 4 Jun 2020 1:41 AM GMT (Updated: 4 Jun 2020 1:41 AM GMT)

கிருஷ்ணகிரியில் தனியார் நிறுவன ஊழியர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவருடைய கையை மர்ம கும்பல் துண்டித்து வீசி சென்றது. இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி பாரதியார் நகர் 4-வது குறுக்கு தெருவில் உள்ள ஒரு வீட்டின் முன்பு நேற்று காலை ஒரு ஆணின் வலது கை முழங்கைக்கு கீழ் துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று துண்டிக்கப்பட்ட கையை கைப்பற்றினர். பின்னர் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது கிருஷ்ணகிரி அருகே உள்ள கிட்டம்பட்டியில் இருந்து கொய்யான்கொட்டாய் செல்லும் பாதையில் உள்ள சுடுகாட்டில் வாலிபர் ஒருவர் கை துண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுரேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெய்கீர்த்தி, சிவசுந்தர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், கை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வாலிபர் கிருஷ்ணகிரி கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (வயது 37) என்பதும், இவருக்கு திருமணமாகி கீதா என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் இருப்பதும் தெரியவந்தது. கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த ஜனவரி மாதம் கீதா, 2 குழந்தைகளுடன், சேலம் தாதகாப்பட்டியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டதும், பாலசுப்பிரமணியன் தனது தாயார் பார்வதியுடன் வாடகை வீட்டில் வசித்து வந்ததும் தெரியவந்தது.

மேலும், பாலசுப்பிரமணியன் தனியார் கூரியர் நிறுவனத்தில் ஊழியராக கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வரை பணிபுரிந்து வந்துள்ளார். மது பழக்கத்திற்கு அடிமையான இவர் வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு ஊர் சுற்றி வந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பாமல் இருந்துள்ளார். அவர் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருடன் சேர்ந்து அடிக்கடி மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது.

எனவே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பாலசுப்பிரமணியன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகித்து விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். மேலும், கள்ளக்காதல் தகராறில் அவர் கொலை செய்யப்பட்டாரா?, அவருடன் மதுகுடித்த அந்த வாலிபர் யார்? அவரை எதற்காக கொலை செய்து, துண்டிக்கப்பட்ட கையை பாரதியார் நகரில் உள்ள ஒரு வீட்டின் முன்பு வீசி சென்றுள்ளனர்? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story