சமூக இடைவெளியை பின்பற்றாமல் நெரிசலில் பயணிக்கும் பொதுமக்கள்


சமூக இடைவெளியை பின்பற்றாமல் நெரிசலில் பயணிக்கும் பொதுமக்கள்
x
தினத்தந்தி 4 Jun 2020 5:04 AM GMT (Updated: 4 Jun 2020 5:04 AM GMT)

விழுப்புரம்- பண்ருட்டி மார்க்கத்தில் குறைந்த பஸ்களே ஓடுவதால் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்ட நெரிசலில் பயணிகள் பயணம் செய்கின்றனர். எனவே கூடுதல் பஸ்களை இயக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

விழுப்புரம்,

தமிழகத்தில் கடந்த 1-ந்தேதி முதல் அரசு பஸ்கள் இயங்க தொடங்கின. இதில் 60 சதவீத பயணிகளுடன் 50 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. விழுப்புரம் கோட்டத்திற்கு உட்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை ஆகிய மண்டல பகுதிகளில் 274 நகர பஸ்களும், 549 புறநகர் பஸ்களும், 11 மலை வழித்தட பஸ்களும், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மண்டல பகுதிகளில் 121 நகர பஸ்களும், 102 புறநகர் பஸ்களும் என மொத்தம் 1,057 அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இவற்றில் விழுப்புரம் மண்டலத்திற்குட்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில் 185 பஸ்களும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 150 பஸ்களும் இயக்கப்படுகின்றன.

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஒவ்வொரு பஸ்சிலும் 3 பேர் அமரக்கூடிய இருக்கையில் 2 பேரும், 2 பேர் அமரக்கூடிய இருக்கையில் ஒருவரும் அமர்ந்து பயணம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த கட்டுப்பாடுகளை பயணிகள் கடைபிடித்து பயணம் செய்கிறார்களா? என்று டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இருப்பினும் ஒரு சில பஸ்களில் பயணிகள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் பயணம் செய்து வருகின்றனர்.

குறிப்பாக விழுப்புரம்- பண்ருட்டி, கடலூர் மார்க்கங்களில் குறைந்த எண்ணிக்கையிலேயே பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் அந்த பஸ்களில் பயணிகள், சமூக இடைவெளியை பின்பற்றாமல் நெரிசலுடன் பயணம் செய்து வருகின்றனர்.

2 பேர் அமரக்கூடிய இருக்கையில் ஒருவர் மட்டுமே அமர்ந்து பயணம் செய்ய வேண்டும் என்று கட்டுப்பாடு விதித்துள்ள நிலையில் அந்த கட்டுப்பாடுகளை காற்றில் பறக்க விட்டதுபோல் ஒவ்வொரு இருக்கையிலும் 2 பேர் நெரிசலாக அமர்ந்து பயணம் செய்தனர்.

இதை பார்க்கும்போது நீண்ட நாட்களுக்கு பிறகு தொடங்கப்பட்ட பஸ் போக்குவரத்து சேவை மீண்டும் நிறுத்தப்பட்டு விடுமோ என்கிற சிந்தனைதான் அனைவரின் மனதிலும் மேலோங்கியது. கொரோனா என்ற உயிர்க்கொல்லி நோயின் தாக்கத்தை பற்றி சிறிதும் அச்சம் கொள்ளாமல் இதுபோன்று பஸ்களில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் பயணம் செய்தால் இந்நோய் சமூக தொற்றாக எளிதில் பரவும்.

இந்நோய் பரவலை தடுக்க சமூக இடைவெளிதான் மிக முக்கியம். ஆகவே பயணிகள் அனைவரும் இதை உணர்ந்து செயல்பட்டால்தான் கொரோனா நோய் வராமல் தங்களை தற்காத்துக்கொள்ள முடியும்.

அதே வேளையில் இனிவரும் நாட்களில் பஸ் பயணிகளை ஒழுங்குப்படுத்துவதில் அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தனிக்கவனம் செலுத்தி கட்டுப்பாடுகளை முறையாக கடைபிடிக்க தீவிர நடவடிக்கை எடுப்பதோடு, பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் தேவைக்கேற்ப விழுப்புரம்- பண்ருட்டி, கடலூர் மார்க்கங்களில் கூடுதல் பஸ்களை இயக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story