கடலூரில், தந்தை இறந்த நாளில் தாயுடன் மகன் தற்கொலை


கடலூரில், தந்தை இறந்த நாளில் தாயுடன் மகன் தற்கொலை
x
தினத்தந்தி 4 Jun 2020 5:26 AM GMT (Updated: 4 Jun 2020 5:26 AM GMT)

கடலூரில் தந்தை இறந்த நாளில் தாயுடன் மகன் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சோக சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

கடலூர்,

கடலூர் அருகே உள்ள நத்தப்பட்டை சேர்ந்தவர் முத்து. விவசாயி. இவருடைய மனைவி லதா (வயது 58), மகன் சேதுராமன்(26). இவர்கள் அனைவரும் கடலூர் கோண்டூர் சாய்பாபா நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

இந்நிலையில் உடல்நிலை சரியில்லாமல் இருந்த முத்துகடந்த ஆண்டு ஜூன் மாதம் 3-ந்தேதி இறந்து விட்டார். இதையடுத்து சேதுராமன் வேலைக்கு செல்லவில்லை. மாறாக அவர் மதுபழக்கத்திற்கு அடிமையானதாக தெரிகிறது. மேலும் கணவர் இறந்த துக்கம் தாங்காமல் சேதுராம னின் தாயும் இருந்து வந்தார்.

இதற்கிடையில் முத்து இறந்து நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்ததால், அவருக்கு திதி கொடுக்க லதா ஏற்பாடு செய்தார். இதற்காக நேற்று முன்தினம் தாயும், மகனும் அதற்கான பொருட்களை வாங்கி வீட்டில் வைத்திருந்தனர். இது பற்றி வீட்டு உரிமையாளர் மற்றும் அக்கம், பக்கத்தில் உள்ளவர்களிடமும் தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை வெகுநேரமாகியும் லதாவும், சேதுராமனும் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த வீட்டு உரிமையாளர், வீட்டின் மாடிக்கு சென்று பார்த்தார்.

அங்கு லதாவும், சேதுராமனும் இறந்து கிடந்தனர். இது பற்றி கடலூர் புதுநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார், சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் முத்து இறந்த நாளில் லதாவும், சேதுராமனும் குளிர்பானத்தில் விஷத்தை கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி லதாவின் உறவினர் ராதாகிருஷ்ணன் கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தந்தை இறந்த நாளில் தாயுடன் மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story