சென்னையில் இருந்து புதுச்சேரி வந்தவர் கொரோனாவுக்கு பலி


சென்னையில் இருந்து புதுச்சேரி வந்தவர் கொரோனாவுக்கு பலி
x
தினத்தந்தி 5 Jun 2020 11:38 PM GMT (Updated: 5 Jun 2020 11:38 PM GMT)

சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு வந்தவர் கொரோனா பாதிப்பால் திடீரென உயிரிழந்தார்.

வில்லியனூர்,

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்த 44 வயதுடைய ஒருவர் அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மேனேஜராக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த மார்ச் மாதம் தனது மனைவி, மகனை அழைத்துக் கொண்டு வில்லியனூர் அருகே கோபாலன் கடை பகுதியில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு வந்தார். பின்னர் அவர் மட்டும் சென்னை திரும்பிச்சென்றார்.

அப்போது திடீரென்று கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதையொட்டி அவரால் திரும்பி வந்து மனைவி-மகனை சென்னைக்கு அழைத்துச்செல்ல முடியவில்லை. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதையொட்டி தனது மனைவி, மகளை அழைத்துச்செல்வதற்காக கோபாலன் கடை பகுதிக்கு காரில் வந்தார்.

நேற்று காலை வீட்டில் இருந்தபோது அவருக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனே அவரை அவரது குடும்பத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்ததில் அவர் ஏற்கனவே இறந்து போனது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

சென்னையில் இருந்து வந்தவர் திடீரென உயிரிழந்ததால் சந்தேகமடைந்து மருத்துவ பரிசோதனை நடத்தியதில் அவர் கொரோனா தொற்று காரணமாக இறந்து இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மாமியார் வீட்டில் 2 நாட்கள் தங்கி இருந்த நிலையில் கொரோனாவால் அவர் உயிரிழந்ததால் அவரது குடும்பத்தினருக்கும் தொற்று பரவி இருக்கலாம் என கருதப்படுகிறது. இந்தநிலையில் அவர்களையும் தனிமைப்படுத்தி மருத்துவ பரிசோதனை நடத்த சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.

கொரோனா பாதிப்பால் சென்னையில் இருந்து வந்தவர் இறந்து போன சம்பவம் புதுச்சேரியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story