தென்காசி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி தந்தை-மகன் உள்பட 3 பேர் பலி


தென்காசி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி தந்தை-மகன் உள்பட 3 பேர் பலி
x
தினத்தந்தி 7 Jun 2020 12:00 AM GMT (Updated: 6 Jun 2020 7:37 PM GMT)

தென்காசி மாவட்டத்தில் மின்சாரம் தாக்கி தந்தை, மகன் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.

கடையநல்லூர்,

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் பாரதியார் வடக்கு தெருவை சேர்ந்தவர் சுப்பையா (வயது 79). அவருடைய மகன் முத்துராஜ் (30). நேற்று முன்தினம் இரவு முத்துராஜ் தனது வீட்டின் அருகே உள்ள டிராக்டர் நிறுத்துமிடத்தில் மோட்டார் போட்டு குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது மோட்டார் அருகே உள்ள கம்பி வளையில் மின்சார வயர் அறுந்து கிடந்துள்ளது. அதனை கவனிக்காமல் முத்துராஜ் கம்பி வளை மீது கை வைத்துள்ளார். அதில் பாய்ந்திருந்த மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

குளிக்க சென்ற மகன் நீண்ட நேரமாகியும் வரவில்லை என மகனை தேடி சுப்பையா தனது நண்பரை அழைத்துக்கொண்டு டிராக்டர் செட்டுக்கு சென்றுள்ளார். அப்போது மகன் கீழே கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து ஓடிச்சென்று தூக்கினார். இதில் அவர் மீதும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதனை பார்த்து சுதாரித்துக்கொண்ட சுப்பையாவின் நண்பர், உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்து மின்சாரத்தை துண்டிக்க வைத்தார். பின்னர் தந்தை, மகன் இருவரையும் பிணமாக மீட்டனர்.

இதுகுறித்து கடையநல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்டாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஒரே குடும்பத்தில் தந்தையும், மகனும் மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதேபோல் சுரண்டை அருகே உள்ள மீனாட்சிபுரம் நாடார் 3-வது தெருவை சேர்ந்த ராமர் களஞ்சியம் என்பவருடைய மகன் லட்சுமணன் (33). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பினார். அப்போது சாரல் மழையில் நனைந்தபடியே வீட்டுக்கு வந்தார். அங்கு தனது வீட்டில் உள்ள மாட்டு தொழுவத்தில் மின் விளக்கு எரியாததால் அதனை உடனடியாக சரிசெய்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே லட்சுமணன் பரிதாபமாக இறந்தார்.

தகவல் அறிந்ததும் சுரண்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். லட்சுமணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். இறந்த லட்சுமணனுக்கு திருமணம் முடிந்து மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story