எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 46,487 பேர் எழுதுகிறார்கள் ; முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர் ஆலோசனை


எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 46,487 பேர் எழுதுகிறார்கள் ; முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர் ஆலோசனை
x
தினத்தந்தி 8 Jun 2020 1:28 AM GMT (Updated: 8 Jun 2020 1:28 AM GMT)

சேலம் மாவட்டத்தில் 15-ந் தேதி தொடங்கும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 46 ஆயிரத்து 487 பேர் எழுதுகிறார்கள். தேர்வு மையங்களில் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர் ராமன் ஆய்வு நடத்தினார்.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் வருகிற 15-ந் தேதி எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தொடங்குகிறது. மேலும் பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வுகளும் சில பாடங்களுக்கு நடைபெற உள்ளது. இந்த பொதுத்தேர்வு பணிகளை பாதுகாப்பான முறையில் மேற்கொள்ளும் பொருட்டு செய்ய வேண்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் சேலத்தில் கலெக்டர் ராமன் தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் கலெக்டர் ராமன் பேசும் போது கூறியதாவது:-

கொரோனா வைரஸ் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு வருகிற 15-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை நடக்கிறது. இதே போல கடந்த மார்ச் மாதம் 26-ந் தேதி நடைபெற இருந்த பிளஸ்-1 வகுப்பு தேர்வு வருகிற 16-ந் தேதி அன்றும், மார்ச் மாதம் 24-ந் தேதி அன்று நடைபெற்ற பிளஸ்-2 தேர்வை எழுத முடியாத தேர்வர்களுக்கு மட்டும் மறுதேர்வு வருகிற 18-ந் தேதி அன்றும் நடத்தப்பட உள்ளது.

சேலம் மாவட்டத்தில் 532 பள்ளிகளில் பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளன. இதில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை 22 ஆயிரத்து 730 மாணவர்கள், 22 ஆயிரத்து 332 மாணவிகள் என 45 ஆயிரத்து 62 பள்ளி மாணவர்களும், 1,425 தனித்தேர்வர்களும் என மொத்தம் 46 ஆயிரத்து 487 மாணவர்கள் தேர்வெழுத உள்ளனர். பிளஸ்-1 தேர்வை 36 ஆயிரத்து 686 மாணவர்களும், பிளஸ்-2 தேர்வை 1,592 மாணவர்களும் எழுத உள்ளனர்.

இந்த தேர்விற்கு 531 முதன்மை கண்காணிப்பாளர்கள், 531 துறை அலுவலர்கள், 5 ஆயிரத்து 859 அறை கண்காணிப்பாளர்கள், 793 நிலையான படையினர், 272 சொல்வதை எழுதுபவர், 31 வழித்தட அலுவலர்கள், 28 வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், 579 ஆசிரியரல்லா பணியாளர்கள் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்கு 532 தேர்வு மையங்கள் மற்றும் 56 சிறப்பு தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. பிளஸ்-1, பிளஸ்-2 தேர்வுக்கு 322 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளின் நலன் கருதி பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல விடுதிகள், ஆதிதிராவிட மாணவ, மாணவிகள் தங்கும் விடுதிகள், உண்டு உறைவிட பள்ளிகள் அனைத்தும் வருகிற 11-ந் தேதி முதல் செயல்பட உள்ளன.

கொரோனா தொற்று நோய் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக ஒரு தேர்வறைக்கு 10 தேர்வர்கள் என்ற எண்ணிக்கையில் மாணவர்கள் சமூக இடைவெளியில் அமர வைக்கப்படுவர். தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் தேர்வுப்பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு முக கவசங்கள் இலவசமாக வழங்கப்படும். தேர்வு மையங்கள் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் இருப்பின் அந்த தேர்வு மையங்களுக்கு மாற்று தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மாணவர்களுக்கு மட்டும் சிறப்பு தேர்வு மையம் அமைக்கப்படும். இந்த தேர்வு மையத்தில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, தனி அறையில் மாணவர்கள் அமர வைத்து தேர்வெழுத நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தேர்வு மையம் முழுவதும் கிருமி நாசினி தெளிப்பதை உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும். நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் வசிக்கும் மற்றும் வெளியூரில் இருந்து வந்து விட்டு தனிமைப்படுத்தலில் உள்ள மாணவர்களை எக்காரணம் கொண்டும் பள்ளிக்கு வந்து நுழைவுச்சீட்டு பெற அழைக்கக்கூடாது. அவர்களது வீடுகளுக்கு சென்று நுழைவுச்சீட்டு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு கலெக்டர் ராமன் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திவாகர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அருள்ஜோதி அரசன் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story