ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.12,500 வழங்க வலியுறுத்தி கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.12,500 வழங்க வலியுறுத்தி கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 Jun 2020 4:19 AM GMT (Updated: 10 Jun 2020 4:19 AM GMT)

ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.12,500 வழங்குவது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர், 

ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.12,500 வழங்குவது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

கரூர் மாவட்ட, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, சி.பி.ஐ. (எம்.எல்.) ஆகிய கட்சிகளின் சார்பில் தாந்தோணிமலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ரத்தினம் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் கந்தசாமி, சி.பி.ஐ. (எம்.எல்.) கட்சியின் மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் கட்சியினர் பலர் கலந்துகொண்டனர். கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ள மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் திட்டங்களை அறிவிக்க வேண்டும்.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் மத்திய அரசு ரூ.7,500, மாநில அரசு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும், பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை முறைப்படுத்தி வழங்க வேண்டும், மகாத்மாகாந்தி ஊரக வேலை உறுதித்திட்டத்தின் படி, கிராமப்புறங்களில் உள்ள அனைத்து அட்டைதாரர்களுக்கும் 200 நாள் வேலைவாய்ப்பை உத்தரவாதப்படுத்த வேண்டும், வங்கிகளில் வாங்கியுள்ள கடன்களுக்கான வட்டியை 6 மாத காலத்திற்கு முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

போலீசார் பாதுகாப்பு

கரூரில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றியக்குழு அலுவலகம் முன்பு, ஒன்றியக்குழு உறுப்பினர் பூரணம் தலைமையிலும், குளித்தலை பஸ் நிலையம் முன்பு ஒன்றிய செயலாளர் பிரபாகரன் தலைமையிலும், அரவக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் கணேசன் தலைமையிலும், தோகைமலை பஸ் நிலையம் முன்பு ஒன்றிய செயலாளர் சக்திவேல் தலைமையிலும், க.பரமத்தி கடைவீதியில் ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி தலைமையிலும், லாலாபேட்டையை அடுத்த பழைய ஜெயங்கொண்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில், கிளை பொறுப்பாளர் நாகராஜன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டம் நடைபெற்ற பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Next Story