கவர்னரின் தவறான முடிவால் பொருளாதாரம் கடும் பாதிப்பு; நாராயணசாமி குற்றச்சாட்டு


கவர்னரின் தவறான முடிவால் பொருளாதாரம் கடும் பாதிப்பு; நாராயணசாமி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 10 Jun 2020 11:39 PM GMT (Updated: 10 Jun 2020 11:39 PM GMT)

கவர்னரின் தவறான முடிவால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

புதுச்சேரி,

புதுச்சேரி சட்டசபை வளாகத்தில் உள்ள கேபினட் அறையில் நேற்று மதியம் அமைச்சரவை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் அமைச்சர்கள் நமச்சிவாயம், ஷாஜகான், மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, கமலக்கண்ணன், தலைமை செயலாளர் அஸ்வனி குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மாநிலத்தின் வருவாயை பெருக்குவது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.கூட்டம் முடிந்ததும் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவு அமலில் இருந்து வரும் நிலையில் ரெட்டியார்பாளையத்தில் துணை சபாநாயகர் அலுவலகம் முன் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தி இருப்பது கண்டனத்துக்குரியது.

மத்திய அரசு நீட் தேர்வை கொண்டு வரும்போது அதனை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுத்தோம். இதுகுறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதி, நீட் தேர்வை கொண்டு வருவதால் கிராமப்புற மாணவர்கள் தேர்ச்சிபெற ஏதுவான சூழ்நிலை இருக்காது என்று தெளிவுபட கூறியிருந்தோம். அப்படி இருந்தாலும் மத்திய அரசு நீட் தேர்வை திணித்தது. இதுதொடர்பாக கோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

நீட் தேர்வு கொண்டுவந்த பின்னர் மருத்துவம் படிப்பில் 50 சதவீத இடங்களை மாநில அரசு எடுத்துக் கொண்டு மீதமுள்ள 50 சதவீத இடங்களை மத்திய அரசுக்கு கொடுக்கிறது. மாநில அரசு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் இட ஒதுக்கீடு அடிப்படையில் இடம் வழங்குகிறது.

ஆனால் மத்திய அரசு இட ஒதுக்கீட்டை கடைபிடிப்பதில்லை. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அனைத்து தரப்பினருக்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை இது அவமதிப்பதாகும். இது பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, மலைவாழ் மக்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதியாகும். மாநில மக்களின் உரிமை பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக புதுவை அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளது. இதன் மூலம் அந்த மக்களுக்கு உரிய இட ஒதுக்கீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மாநில எல்லைகள் மூடப்பட்டுள்ளதால் அரசுக்கு வருமானம் குறைந்து பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மதுக்கடைகளை பொறுத்தவரை தமிழகத்தை விட விலை அதிகமாக இருப்பதால் அதன் மூலம் கிடைத்த வருவாயும் குறைந்து விட்டது. மாநில வருவாயை பெருக்க திட்டங்கள் போட்டால் அதை தடுத்து நிறுத்தும் வேலையை கவர்னர் செய்து வருகிறார்.

மது பானங்களுக்கான கூடுதல் வரியை குறைத்தால் அதிக வருமானம் வரும் என்று கூறினால் அதை ஏற்க மறுத்துவிட்டார். அவரது தவறான முடிவால் மாநில பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அரசுக்கு வருமானம் வராத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே நாம் ரிசர்வ் வங்கியை தேடி கடன் பெறும் நடவடிக்கையை எடுக்கவுள்ளோம்.

மாநில வருவாய் பாதிக்கப்படுவதால் இழப்பீடு கேட்டு பல கோரிக்கைகளை மத்திய அரசுக்கு வைத்தோம். ஆனால் எந்த உதவியும் செய்யவில்லை. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான உபகரணங்கள் வாங்க கூட மத்திய அரசு நிதி வழங்கவில்லை. உதவி செய்யவும் தயாராக இல்லை. இது மிகுந்த வருத்தமளிக்கிறது. புதுவையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் முதியவர் ஒருவர் இறந்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதுவையில் சிறந்த சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story