நடமாடும் எக்ஸ்-ரே வாகனம் மூலம் காச நோயாளிகளை கண்டறிந்து சிகிச்சை


நடமாடும் எக்ஸ்-ரே வாகனம் மூலம்  காச நோயாளிகளை கண்டறிந்து சிகிச்சை
x
தினத்தந்தி 11 Jun 2020 2:00 AM GMT (Updated: 11 Jun 2020 2:00 AM GMT)

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நடமாடும் எக்ஸ்-ரே வாகனத்தின் மூலம் காசநோயாளிகள் கண்டறியப்பட்டு வருகின்றனர்.

முருகபவனம், 

திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் மாவட்ட காசநோய் சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் எக்ஸ்-ரே படம் எடுத்தல் மற்றும் சளி பரிசோதனை மூலம் காசநோயாளிகள் கண்டறியப்பட்டு வருகின்றனர். அவ்வாறு கண்டறியப்படும் காசநோயாளிகளுக்கு சிகிச்சை மற்றும் மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால் மாவட்ட காசநோய் சிகிச்சை பிரிவு மையத்தில் காசநோய் கண்டறியும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதையொட்டி திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நடமாடும் எக்ஸ்-ரே வாகனத்தின் மூலம் காசநோயாளிகள் கண்டறியப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட காசநோய் சிகிச்சை பிரிவு துணை இயக்குனர் ராமச்சந்திரன் கூறுகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 1,638 காசநோயாளிகள் கண்டறியப்பட்டனர். இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக தற்போது பரவி வருவதால் மாவட்டத்தில் உள்ள 14 வட்டாரங்களுக்கும் நடமாடும் எக்ஸ்-ரே வாகனத்தின் மூலம் நேரில் சென்று காசநோயாளிகள் கண்டறியப்பட்டு வருகின்றனர். அதன்படி திண்டுக்கல், நத்தம், உலுப்பகுடி, கன்னிவாடி, ஆத்தூர் ஆகிய வட்டாரப் பகுதிகளில் 634 பேருக்கு காசநோய் தொற்று உள்ளதா? என்ற பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 28 பேர் காசநோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என கண்டறியப்பட்டு, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றார்.

Next Story