தோட்டக்கலை கல்லூரிகளை தொடங்கும் முடிவு ரத்து: கர்நாடகத்தில் கூட்டுறவு சங்க தேர்தல் நடத்த முடிவு - மந்திரிசபை கூட்டத்திற்கு பின் மாதுசாமி பேட்டி


தோட்டக்கலை கல்லூரிகளை தொடங்கும் முடிவு ரத்து: கர்நாடகத்தில் கூட்டுறவு சங்க தேர்தல் நடத்த முடிவு - மந்திரிசபை கூட்டத்திற்கு பின் மாதுசாமி பேட்டி
x
தினத்தந்தி 12 Jun 2020 12:49 AM GMT (Updated: 12 Jun 2020 12:49 AM GMT)

கர்நாடகத்தில் கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த முடிவு செய்துள்ளதாக மந்திரி மாதுசாமி கூறினார்.

பெங்களூரு,

கர்நாடக மந்திரிசபை கூட்டம் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் அனைத்து மந்திரிகள் மற்றும் தலைமை செயலாளர் உள்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சட்டத்துறை மந்திரி மாதுசாமி நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தம் செய்ய முடிவு செய்துள்ளோம். அதன்படி கர்நாடகத்தில் ஒரு திறந்தநிலை பல்கலைக்கழகம் மட்டுமே செயல்படும். தொலைதூர கல்வியை இந்த பல்கலைக்கழகம் மூலம் மட்டும் படிக்க வேண்டும். மண்டியா மற்றும் மகாராணி பல்கலைக்கழகங்களுக்கு தனி அதிகாரியை நியமிக்க முடிவு செய்துள்ளோம். பெங்களூரு மத்திய பல்கலைக்கழகத்தின் பெயரை, பெங்களூரு சிட்டி பல்கலைக்கழகம் என்று பெயர் மாற்ற முடிவு செய்துள்ளோம்.

பெங்களூரு சென்டிரல் கல்லூரி வளாகத்தில் உள்ள அரசு அறிவியல் கல்லூரியை நிருபதுங்கா பல்லைக்கழகம் என்று மாற்ற முடிவு செய்துள்ளோம். கர்நாடகத்தில் 1,307 துணை சுகாதார மையங்கள் மற்றும் 1,694 ஆரம்ப சுகாதார நிலையங்களை சுகாதார, நலமையங்களாக தரம் உயர்த்த முடிவு செய்துள்ளோம். 8 மாவட்டங்களில் இந்த மையங்கள் அமைக்கப்படுகின்றன.

இந்த திட்டத்திற்கு மத்திய அரசு நிதி உதவி அளிக்கிறது. 3 ஆண்டுகள் தொடர்ந்து நிதி கிடைக்கும். கர்நாடகத்தில் பொது நலன் கருதி போராட்டம் நடத்தியவர்கள் மீது போடப்பட்ட 53 வழக்குகள் வாபஸ் பெற முடிவு செய்யப்பட்டுள்ளன. இது விவசாயிகள், இந்து அமைப்பினர் உள்பட பல்வேறு தரப்பினர் மீது போடப்பட்ட வழக்குகள் ஆகும்.

முந்தைய அரசு ஹாசன், ராய்ச்சூரில் தலா ஒரு தோட்டக்கலை கல்லூரிகளை தொடங்க முடிவு செய்தது. அந்த முடிவை ரத்து செய்துள்ளோம். பழிவாங்கும் நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கவில்லை. பெங்களூருவில் அறிவியல் ஆராய்ச்சி மையம் அமைக்க ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது. இதனை ரூ.86.75 கோடி செலவில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக ரூ.20 கோடி நிதி வழங்கப்படும்.

பெங்களூரு தெற்கு தாலுகாவில் லோக்சிக்‌ஷன அறக்கட்டளைக்கு 4 ஏக்கர் நிலம் ஒதுக்க முடிவு செய்துள்ளது. பெங்களூரு சிக்கபேகூர் மற்றும் ஹொரமாவு ஆகிய பகுதிகளில் கழிவுநீர் மறுசுழற்சி மூலம் 25 மில்லியன் லிட்டர் நீரை கோலார் மற்றும் சிக்பள்ளாப்பூருக்கு கே.சி.வேலி திட்டத்தின் மூலம் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. ரூ.40 கோடி செலவில் இந்த திட்டம் அமல்படுத்தப்படுகிறது.

உடுப்பி மாவட்டம் பைந்தூர் தாலுகாவில் பைந்தூர், உடுத்தெரே, படவரி பஞ்சாயத்துகளை ஒருங்கிணைத்து பட்டண பஞ்சாயத்தாக மாற்ற முடிவு செய்துள்ளோம். கொரோனா காரணமாக கூட்டுறவு சங்க தேர்தலை ஒத்திவைத்தோம். தற்போது சர்க்கரை ஆலைகளை தவிர கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த முடிவு செய்துள்ளோம். கர்நாடக திறந்தநிலை பல்கலைக்கழகத்திற்கு வருமான வரி விலக்கு அளிக்க முடிவு செய்துள்ளோம்.

சிக்கமகளூருவில் புதிதாக மருத்துவ கல்லூரி அமைக்க ஏற்கனவே முடிவு செய்தோம். சிக்கமகளூருவில் போதிய இடம் கிடைக்கவில்லை. சிக்கமகளூருவுக்கு அருகில் உள்ள கசபா ஒன்றியம் தேகூர் என்ற இடத்தில் அந்த கல்லூரியை அமைக்க முடிவு செய்துள்ளோம். கர்நாடக ரியல் எஸ்டேட் வளர்ச்சி சட்டத்தில் ஒரு திருத்தம் செய்ய முடிவு செய்துள்ளோம். இதன் மூலம் விற்பனை ஒப்பந்தம் செய்து கொள்ள முடியும். இதன் மூலம் வீடு வாங்குவோருக்கு பயன் கிடைக்கும். இவ்வாறு மாதுசாமி கூறினார்.

Next Story