முத்தியால்பேட்டையில், மின்துறை ஊழியர் வீட்டில் நகை, பணம் திருட்டு - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
முத்தியால்பேட்டையில் மின்துறை ஊழியர் வீட்டில் நகை, பணம் திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
புதுச்சேரி,
புதுச்சேரி முத்தியால்பேட்டை வ.உ.சி. நகர் 3-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் தீனதயாளன் (வயது39). மின்துறை ஊழியர். இவரது மனைவி ஞானவள்ளி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். தீனதயாளன் தற்போது ஒதியம்பட்டு பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். இதற்காக வங்கியில் ரூ.8½ லட்சம் கடன் பெற்றிருந்தார். அதில் ரூபாய் ஒரு லட்சத்தை தனது வீட்டு பீரோவில் வைத்திருந்தார்.
நேற்று முன்தினம் காலை ஒதியம்பட்டில் புதிதாக வீடு கட்டும் இடத்தில் நிலைகதவு வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்காக தீனதயாளன் தனது குடும்பத்துடன் அங்கு சென்றார்.
பின்னர் வீடு திரும்பிய போது வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்து ரூபாய் ஒரு லட்சம் ரொக்கம், 10 பவுன் நகைகளை காணாமல் இருப்பதைகண்டு திடுக்கிட்டார். வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்டு தெரிந்து கொண்டு மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து திருடிச் சென்று இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து தீனதயாளன் புகார் செய்ததன் பேரில் முத்தியால்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. அந்தப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை பார்வையிட்டு குற்றவாளிகளை அடையாளம்காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
Related Tags :
Next Story