கல்லணை நாளை திறப்பு: குறுவை சாகுபடியில் விவசாயிகள் மும்முரம்


கல்லணை நாளை திறப்பு: குறுவை சாகுபடியில் விவசாயிகள் மும்முரம்
x
தினத்தந்தி 15 Jun 2020 12:48 AM GMT (Updated: 15 Jun 2020 12:48 AM GMT)

கல்லணை நாளை திறக்கப்படுவதையொட்டி குறுவை சாகுபடியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தஞ்சாவூர்,

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் (தஞ்சை, நாகை, திருவாரூர்) விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இது தவிர கோடை நெல் சாகுபடியும் நடைபெறும். வழக்கமாக குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்படும். குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறந்தால் குறுவை சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும்.

தாமதமாக தண்ணீர் திறந்தால் குறுவை பரப்பளவு குறைந்து சம்பா சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். இந்தநிலையில் குறுவை சாகுபடிக்காக கடந்த 12-ந் தேதி மேட்டூர் அணையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இந்த தண்ணீர் நாளை(செவ்வாய்க்கிழமை) கல்லணையை வந்து அடைகிறது. அன்றைய தினமே கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய், கொள்ளிடத்தில் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

விவசாயிகள் மும்முரம்

ஏற்கனவே ஆழ்குழாய் கிணறு மூலம் குறுவை சாகுபடி பணியை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது ஆறுகளிலும் தண்ணீர் திறந்துவிடப்பட உள்ளதால் ஆற்றுப்பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகளும் நிலத்தை சமப்படுத்தும் பணி, எருவை வயல்களில் கொட்டும் பணி, உழவு பணி போன்றவற்றில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தஞ்சை மாவட்டத்தில் 1 லட்சத்து 8 ஆயிரத்து 62 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆழ்குழாய் கிணறு மூலம் இதுவரை 44 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் 82 ஆயிரத்து 500 ஏக்கரும், நாகை மாவட்டத்தில் 1 லட்சத்து 30 ஆயிரம் ஏக்கரும் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

வேளாண்மை அதிகாரி கருத்து

இதற்கான நாற்றங்கால் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆற்றுபாசனத்தை நம்பி நடவு செய்யும் விவசாயிகள் நாற்றங்காலுக்காக நிலத்தை தயார் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். பம்புசெட் பாசன பகுதிகளில் தற்போது சமுதாய நாற்றங்கால் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பம்புசெட் பகுதியில் நாற்றங்கால் தயார் செய்யப்பட்டு, ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படும் போது நடவு செய்வதற்கு ஏதுவாக தயார் செய்யப்பட்டு வருகிறது.

இது குறித்து தஞ்சை மாவட்ட வேளாண்மைத்துறை இணை இயக்குனர் ஜஸ்டின் கூறும்போது, தஞ்சை மாவட்டத்தில் 700 ஏக்கரில் நாற்றுகள் தயாராக உள்ளன. இவற்றின் மூலம் 32 ஆயிரம் ஏக்கரில் நடவு பணி செய்ய முடியும். மேலும் 40 ஏக்கரில் சமுதாய நாற்றங்கால் விடப்பட்டுள்ளது. இதுவரை 270 டன் விதைநெல் விவசாயிகளுக்கு வினியோகிக்கப்பட்டுள்ளது. இன்னும் 268 டன் விதைநெல் கையிருப்பில் உள்ளது. 5 ஆயிரத்து 600 டன் யூரியாவும், 5 ஆயிரத்து 900 டன் டி.ஏ.பி.யும், 3 ஆயிரம் டன் பொட்டாஷ் உரமும் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கடைமடை வரை தண்ணீர் சென்று விவசாயம் செழிப்பாக இருக்கும் என்றார்.

Next Story