முகக்கவசம், சமூக இடைவெளி, பொது சுகாதாரத்தை கடைபிடியுங்கள் - கவர்னர் கிரண்பெடி வேண்டுகோள்


முகக்கவசம், சமூக இடைவெளி, பொது சுகாதாரத்தை கடைபிடியுங்கள் - கவர்னர் கிரண்பெடி வேண்டுகோள்
x
தினத்தந்தி 15 Jun 2020 1:00 AM GMT (Updated: 15 Jun 2020 1:00 AM GMT)

கொரோனா பரவாமல் தடுப்பதில் கூட்டு பொறுப்பு உள்ளது. எனவே முகக்கவசம், சமூக இடைவெளி, பொது சுகாதாரம் ஆகிய 3 விஷயங்களை கடைபிடியுங்கள் என கவர்னர் கிரண்பெடி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதுச்சேரி,

புதுச்சேரி கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரி மக்களுக்கு மீண்டும் வேண்டுகோள் முன்வைக்கிறேன். இதில் முக்கியமாக 3 விஷயங்களை கடைபிடியுங்கள். முகக்கவசம் அணியுங்கள், சமூக இடைவெளியை பொது இடங்களில் கடைபிடியுங்கள், அனைத்து இடங்களிலும் சுகாதாரத்தை முழுமையாக பேணுங்கள். முக கவசம் உங்களையும், மற்றவர்களையும் காக்கும்.

காய்கறி மார்க்கெட், மீன் மார்க்கெட் என பொது இடங்களில் சமூக இடைவெளி அவசியம் கடைபிடியுங்கள். வேகமாக இடித்துப் பிடித்துக் கொண்டு செல்ல வேண்டாம். பொறுமையுடன் இடைவெளியை கடைபிடித்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்லுங்கள். மார்க்கெட்டுகளில் இது முக்கியம். முக்கியமாக பொது சுகாதாரத்தையும், தனிநபர் சுகாதாரத்தையும் அனைத்து இடத்திலும் பேணி பாதுகாக்க வேண்டும்.

நாம் தற்போது கடினமான சூழலில் இருக்கிறோம். தடுப்பு நடவடிக்கை அவசியம். கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதில் அனைவருக்கும் கூட்டு பொறுப்பு உள்ளது. நமக்கு பாதுகாப்பு மிக அவசியம். தொடர்ந்து தனிநபர் சார்ந்தும், சமூகம் சார்ந்தும் கூட்டு பொறுப்புடன் செயல்படுங்கள். ஏனெனில் நாட்டின் சில பகுதிகளில் உள்ள தகவல்கள் பயமுறுத்துகின்றன. அதனால் தடுப்பு தொடர்பான அனைத்து முயற்சிகளையும் பின்பற்ற வேண்டும். கடுமையான தடுப்பு நடவடிக்கைகள் இருந்தால் தான் மக்களை காப்பாற்ற முடியும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story