வீட்டின் பூட்டை உடைத்து 1¾ கிலோ நகைகள்-ரூ.7 லட்சம் கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு


வீட்டின் பூட்டை உடைத்து 1¾ கிலோ நகைகள்-ரூ.7 லட்சம் கொள்ளை மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 16 Jun 2020 12:54 AM GMT (Updated: 16 Jun 2020 12:54 AM GMT)

கொரடாச்சேரி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 1¾ கிலோ நகைகள் மற்றும் ரூ.7 லட்சத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கொரடாச்சேரி,

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே உள்ள அத்திக்கடை தெற்கு தெருவை சேர்ந்தவர் ரசூல் பீவி. இவர் தனது வீட்டில் மகன் சர்புதீன், அவருடைய மனைவி ரீமா மற்றும் குழந்தைகள், மகள் ரம்ஜான்பேகம், அவரது கணவர் யூசூப்தீன் மற்றும் குழந்தைகள், மற்றொரு மகன் நூருல் அமீனின் மனைவி சுல்தானா பேகம் உள்ளிட்டோருடன் கூட்டு குடும்பமாக வசித்து வருகிறார்.

இவர்களில் மகன் சர்புதீன், மருமகன் யூசூப்தீன் ஆகியோர் குவைத் நாட்டில் வேலை பார்த்து வந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 2 பேரும் அத்திக்கடை வந்தனர். மற்றொரு மகன் நூருல் அமீன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். ரசூல் பீவியின் வீட்டில் உள்ள பிரோவில் அவரது மகன்கள் மற்றும் இரு மகள்கள் ஆகியோரின் குடும்ப நகைகள் 220 பவுன் நகைகள் வைக்கப்பட்டு இருந்தது.

பூட்டு உடைப்பு

யூசூப்தீன் தனது மனைவி மற்றும் மைத்துனர் சர்புதீன் ஆகியோருடன் கடந்த சனிக்கிழமை மாலை மன்னார்குடியில் உள்ள மருத்துவமனைக்கு சென்றார். இதனிடையே வீட்டில் இருந்த அனைவரும் அதே ஊரில் ஜாகிர்உசேன் தெருவில் உள்ள ரசூல் பீவியின் மற்றொரு மகள் சக்கீனா வீட்டுக்கு சென்றனர்.

மருத்துவமனைக்கு சென்றவர்கள் சனிக்கிழமை இரவு அத்திக்கடைக்கு திரும்பி வந்து தங்கள் குடும்பத்தினருடன் சக்கீனா வீட்டிலேயே தங்கி உள்ளனர். இதனால் அவர்களுடைய வீடு பூட்டிக்கிடந்தது.

நேற்று முன்தினம் மதியம் குடும்பத்தினர் அனைவரும் மீண்டும் வீட்டுக்கு சென்று பார்த்தனர். அப்போது வீட்டின் முகப்பில் உள்ள கிரில் கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதேபோல வீட்டு வாசலில் உள்ள மரக்கதவும் உடைக்கப்பட்டிருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்தனர்.

1¾ கிலோ நகைகள்-ரூ.7 லட்சம் கொள்ளை

வீட்டில் இருந்த 2 இரும்பு பீரோக்களும் உடைக்கப்பட்டு இருந்தது. அந்த பீரோக்களில் வைக்கப்பட்டு இருந்த 220 பவுன் நகைகள்(1 கிலோ 760 கிராம்) மற்றும் ரூ.7 லட்சத்தை காணவில்லை. வீட்டில் ஆட்கள் இல்லை என்பதை அறிந்த மர்ம நபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த திருவாரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தினேஷ்குமார், கூத்தாநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் கொரடாச்சேரி போலீசார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மோப்ப நாய் மூலமாக துப்பு துலக்கப்பட்டது. தடயவியல் நிபுணர்கள் வீட்டில் சோதனை நடத்தினர்.

இதுதொடர்பாக ரசூல்பீவியின் மருமகன் யூசூப்தீன் கொரடாச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வலைவீச்சு

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக துணை போலீஸ் சூப்பிரண்டு தினேஷ்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீசார் நகை-பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

கொள்ளை போன நகைகள் மற்றும் பணம் ஆகியற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ.75 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த கொள்ளை சம்பவம் கொரடாச்சேரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story