பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஆறு, வாய்க்கால்களை விரைந்து தூர்வார நடவடிக்கை அமைச்சர் தகவல்


பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஆறு, வாய்க்கால்களை விரைந்து தூர்வார நடவடிக்கை அமைச்சர் தகவல்
x
தினத்தந்தி 16 Jun 2020 1:01 AM GMT (Updated: 16 Jun 2020 1:01 AM GMT)

பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஆறு, வாய்க்கால்களை விரைந்து தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கமலக்கண்ணன் கூறினார்.

காரைக்கால்,

குறுவை சாகுபடிக்காக கடந்த 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கல்லணை வழியாக திருவாரூர் மாவட்டம் பேரளம் வந்து, அங்கிருந்து காரைக்கால் அம்பகரத்தூர் நூலாறு வழியாக காரைக்காலுக்கு வரும். மேட்டூர் அணை நீர் விவசாயத்திற்கு பயன்படும் வகையில் காரைக்காலில் உள்ள பெரும்பாலான ஆறு, வாய்க்கால்கள் தூரவாரபப்டவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டி வந்தனர்.

இந்த நிலையில் மாவட்ட பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஆறு, வாய்க்கால்கள் பொக்லின் எந்திரம் மூலம் தூர்வாரும் பணி நேற்று தொடங்கியது. இதை அம்பகரத்தூர் மேல வாய்க்கால் பகுதியில் புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

உரிய நேரத்தில் திறப்பு

பல ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை குறுவை சாகுபடிக்காக உரிய நேரத்தில் திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை நீர் இந்த மாத இறுதியில் காரைக்காலுக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குள் திருநள்ளாறு, நெடுங்காடு, திருமலைராயன்பட்டினம் பகுதிகளில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 91 கிலோ மீட்டர் தூரமுள்ள ஆறுகள், வாய்க்கால்களை தூர்வார திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் புதுச்சேரிக்கு குறுவை சாகுபடிக்கு 1 டி.எம்.சி. தண்ணீர் கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் காலத்தோடு தண்ணீர் வராததால் குறுவை சாகுபடியை விவசாயிகள் மறந்துவிட்டனர்.

குறுவை பயிரிடலாம்

ஆனால் இந்த ஆண்டு விவசாயிகள் குறுவை பயிரை சாகுபடி செய்ய முயற்சிக்கலாம். விவசாயிகளுக்கு தேவையான விதை, உரம் உள்ளிட்ட இடுபொருட்கள் கிடைக்க வேளாண் துறை மற்றும் மாதூர் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக குறுகிய கால பயிர்களை சாகுபடி செய்ய விவசாயிகள் முன்வரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் காரைக்கால் மாவட்ட கலெக்டர் அர்ஜூன்சர்மா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story