நஞ்சுக்கொடி இறக்கத்தால் பாதிக்கப்பட்ட வடமாநில கர்ப்பிணிக்கு ஆபரேஷன் அரசு டாக்டர்கள் சாதனை


நஞ்சுக்கொடி இறக்கத்தால் பாதிக்கப்பட்ட வடமாநில கர்ப்பிணிக்கு ஆபரேஷன் அரசு டாக்டர்கள் சாதனை
x
தினத்தந்தி 17 Jun 2020 12:16 AM GMT (Updated: 17 Jun 2020 12:16 AM GMT)

நஞ்சுக்கொடி இறக்கத்தால் பாதிக்கப்பட்ட வடமாநில கர்ப்பிணக்கு ஆபரேஷன் செய்து கரூர் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் சாதனை படைத்தனர்.

கரூர்,

மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் பூனம்ராம் (வயது 35). இவர் தனது குடும்பத்தினருடன் கடந்த 3 ஆண்டுகளாக கரூரில் வசித்து வருகிறார். இவருக்கு முதல் குழந்தை அவரது சொந்த மாநிலத்திலேயே ஆபரேஷன் மூலம் பிறந்துள்ளது. ஆனால், அந்த குழந்தை பிறந்த 3 நாட்களில் இறந்து விட்டது. மீண்டும் கர்ப்பமான அவருக்கு 2-வது மாதத்தில் கரு கலைந்துள்ளது.

தற்போது 3-வது முறையாக கர்ப்பம் தரித்த அவர், 7 மாதங்கள் முடிவுற்ற நிலையில், கரூர் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருந்தார். அவருக்கு முதல் குழந்தை ஆபரேஷன் மூலம் பிறந்ததாலும், நஞ்சுக்கொடியில் இறக்கம் இருந்ததாலும், கர்ப்பப் பையின் உட்சுவரை துளைத்து கர்ப்பப் பையின் வெளிசுவர் வரை பரவிய நிலையில், நஞ்சுக்கொடியை பிரிக்க முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், சிறு நீர்ப்பை கர்பப்பையுடன் ஒட்டிய நிலையில் இருந்தது.

ஆபரேஷன்

இதனால், அவருக்கு ஆபரேஷன் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. ஆனாலும், இதனை சவாலாக ஏற்றுக் கொண்டு மகப்பேறு துறைத் தலைவர் காயத்ரிதேவி தலைமையில் மகப்பேறு டாக்டர்கள் மாலினி, தேவிலட்சுமி, அறுவை சிகிச்சை டாக்டர் லட்சுமணன், சிறுநீரக சிறப்பு அறுவை சிகிச்சை டாக்டர் பரணி, மயக்கவியல் டாக்டர் கார்த்திகேயன் மற்றும் நர்சுகள் கொண்ட குழுவினர் ஆபரேஷன் செய்தனர். அப்போது அப்பெண்ணுக்கு 1.280 கிலோ எடையுள்ள அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் அவர், தீவிர கண்காணிப்பு பிரிவில் சேர்க்கப்பட்டார். தற்போது தாயும், சேயும் நலமாக உள்ளனர்.

வடமாநில பெண்ணுக்கு வெற்றிகரமாக ஆபரேஷன் செய்து சாதனை படைத்த மருத்துவ குழுவினரை ஆஸ்பத்திரி கல்லூரி முதல்வர் தேரணிராஜன் பாராட்டினார். தனியார் ஆஸ்பத்திரிகளில் இந்த ஆபரேஷனுக்கு ரூ.1½ லட்சம் வரை செலவாகும். கரூர் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் கடந்த 6 மாதங்களில், 4 கர்ப்பிணிகள் நஞ்சுக்கொடி இறக்கத்தால் பாதிக்கப்பட்டு, ஆபரேஷன் மூலம் பூரண குணமடைந்துள்ளனர். மேலும், இங்குள்ள மருத்துவ குழுவினர் கொரோனா வைரஸ் தொற்றுக்கான சிகிச்சை, ‘கவசாக்கி‘ என்ற அரிய வகை நோய் உள்ளிட்ட புதுவிதமான நோய்களுக்கும் சிகிச்சை அளித்து சாதனை படைத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story