ஊத்துக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள்களில் ரூ.1 லட்சம் மதுபாட்டில்கள் கடத்தல் 9 பேர் கைது


ஊத்துக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள்களில் ரூ.1 லட்சம் மதுபாட்டில்கள் கடத்தல் 9 பேர் கைது
x
தினத்தந்தி 17 Jun 2020 11:55 PM GMT (Updated: 17 Jun 2020 11:55 PM GMT)

ஊத்துக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள்களில் கடத்தி வந்த ரூ.1 லட்சம் மதிப்புள்ள 493 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஊத்துக்கோட்டை,

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள பாலேஸ்வரம் பகுதியில் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் உத்தரவின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராக்கிகுமாரி, சீனிவாசன், செல்வராஜ், லோகநாதன், சம்பத் ஆகியோர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்திற்கிடமாக சாலை ஓரத்தில் மோட்டார்சைக்கிள்களில் பைகளுடன் நின்று கொண்டிருந்த 9 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். இதையடுத்து, அவர்கள் வைத்திருந்த பைகளை திறந்து பார்த்த போது, அதில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள 493 டாஸ்மாக் மதுபாட்டில்கள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.

9 பேர் கைது

பின்னர், அவர்களிடம் விசாரணை நடத்தியதில், பெரியபாளையம் அருகே உள்ள அரியபாக்கம் பெரியகாலனியை சேர்ந்த மணிகண்டன் (வயது 27), சார்லஸ் (27), பாக்கியராஜ் (33), சென்னை மணலியை சேர்ந்த ரமேஷ் (27), எல்லாபுரத்தை சேர்ந்த சுரேந்தர் (38), நாகராஜ் (23), நெல்வாய் சந்திராபுரத்தை சேர்ந்த அருணகிரி (38), சக்கரவர்த்தி 52), புழலை சேர்ந்த செந்தில்முருகன் (35) என்பது தெரிந்தது. இவர்க்ள் 9 பேரும் மோட்டார் சைக்கிள்களில் மதுபாட்டில்களை விற்பனைக்காக கடத்தி கொண்டு செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, 9 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த 9 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.

Next Story