கங்கைகொண்டான் சோதனைச்சாவடியில் ஒரே நாளில் 832 பேருக்கு கொரோனா பரிசோதனை


கங்கைகொண்டான் சோதனைச்சாவடியில் ஒரே நாளில் 832 பேருக்கு கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 19 Jun 2020 11:00 PM GMT (Updated: 19 Jun 2020 5:36 PM GMT)

கங்கைகொண்டான் சோதனைச்சாவடியில் நேற்று ஒரே நாளில் 832 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. சென்னை வாகனங்கள் குவிந்ததால் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

நெல்லை, 

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் தினமும் 400-க்கும் மேற்பட்ட வாகனங்கள் நெல்லைக்கு வருகின்றன. இவற்றில் வருபவர்களால்தான் நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

இதை தடுக்க மும்பை, சென்னை மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வருபவர்களை நெல்லை மாவட்ட எல்லையில் உள்ள கங்கைகொண்டான் சோதனைச்சாவடியில் நிறுத்தி சோதனை நடத்தப்படுகிறது. பின்னர் அவர்களை அங்குள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்தில் இருக்கும் கொரோனா பரிசோதனை மையத்துக்கு அனுப்பி பரிசோதனை செய்யப்படுகிறது. அதில், அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுகின்றனர். இல்லாவிட்டால் அவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். மேலும் சோதனைச்சாவடியில் அனைவருக்கும் ‘தெர்மல் ஸ்கேனர்‘ மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை நடத்தப்படுகிறது.

832 பேருக்கு பரிசோதனை

இந்த நிலையில் சென்னையில் இருந்து வருகிறவர்கள் தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டு, அவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு அதற்கான நோட்டீஸ் ஒட்டி இருந்தாலும், அவர்கள் வெளியே சுற்றித்திரிவதாக புகார்கள் அதிகளவில் வருகிறது. இதனால் சென்னையில் இருந்து வருகிறவர்களுக்கு தொற்று இல்லை என்றாலும் அவர்களை 14 நாட்கள் முகாமில் தங்கவைக்க ஏற்பாடு நடந்து வருகிறது.

சென்னையில் முழு ஊரடங்கு நேற்று அமலுக்கு வந்த நிலையில் சென்னையில் இருந்து தென்மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானவர்கள் வாகனங்களில் சொந்த ஊருக்கு வந்தனர். இதனால் கங்கைகொண்டான் சோதனைச்சாவடியில் வாகனங்கள் குவிந்தன. அங்கு நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு பிறகு நேற்று மாலை வரை சென்னை உள்ளிட்ட வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 422 வாகனங்களில் சோதனை நடத்தப்பட்டது. அதில் வந்த 832 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

தீவிர கண்காணிப்பு

இ-பாஸ் எடுக்காமல் வருகிறவர்கள் கங்கைகொண்டான் ஊருக்குள் சென்று வெளியே வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தப்பி செல்லும் வாகனங்களை பிடிக்க 15 ரோந்து வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் கங்கைகொண்டான் இணைப்பு சாலை மூடப்பட்டது. இதுதவிர கோவில்பட்டி அருகே உள்ள ஏழாயிரம்பண்ணை, கயத்தாறு அருகே உள்ள சன்னதுபுதுக்குடி, வடகரை, கரிசல்குளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இணைப்பு சாலைகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

கங்கைகொண்டான் சோதனைச்சாவடியில், வாகனங்கள் தப்பி செல்லாமல் இருக்க தடுப்பு வேலியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. சென்னையில் இருந்து ஏராளமானோர் நெல்லைக்கு வருவதால் அங்கு கூடுதல் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

Next Story