தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் கொரோனாவால் மரணம்


தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் கொரோனாவால் மரணம்
x
தினத்தந்தி 21 Jun 2020 11:15 PM GMT (Updated: 21 Jun 2020 10:28 PM GMT)

தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் மாவட்ட செயலாளர் கொரோனாவால் உயிர் இழந்தார்.

திரு.வி.க. நகர், 

வடசென்னை மாவட்ட தி.மு.க. முன்னாள் செயலாளர் பலராமன், கொரோனாவால் நேற்று பலியானார். அவருக்கு வயது 77. சென்னை அண்ணா நகர் சாந்தி காலனியில் வசித்து வந்த அவருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக அண்ணாநகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு நடத்திய பரிசோதனையில் அவருக்கு கொரோனா உறுதியானது.

மேல் சிகிச்சைக்காக நேற்று முன்தினம் நள்ளிரவு ஆழ்வார்பேட்டையில் உள்ள பிரபல தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பலராமன், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார். அவரது உடல் அரும்பாக்கம் சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.

கடந்த 50 ஆண்டுகளாக தி.மு.க.வில் பல்வேறு பொறுப்பு வகித்து வந்தார். 25 ஆண்டுகளாக வடசென்னை மாவட்ட செயலாளராக இருந்த பலராமன், இதுவரை கவுன்சிலர், எம்.எல்.ஏ., எம்.பி. என எந்த பதவிக்கும் போட்டியிடாமல் மாவட்ட செயலாளர் பதவியே போதுமென கட்சிப்பணி செய்து வந்தார்.

பரவியது எப்படி

கடந்த சில நாட்களாக கொரோனா ஊரடங்கால் வெளியே செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்த அவருக்கு, கொரோனா வைரஸ் எப்படி பரவியது? என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

உயிரிழந்த பலராமனுக்கு 3 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். அவருடைய மனைவி ஏற்கனவே இறந்து விட்டார். மகள் வெளிநாட்டிலும், மகன்கள் சென்னையிலும் வசித்து வருகின்றனர்.

மு.க.ஸ்டாலின்இரங்கல்

வடசென்னை மாவட்ட தி.மு.க. முன்னாள் செயலாளரும், தணிக்கைக்குழு உறுப்பினருமான எல்.பலராமன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

எல்.பலராமன் கொரோனா நோய் தொற்றால் மறைந்தார் என்ற அதிர்ச்சி செய்தியால் நான் மீளாத்துயரத்திற்கும், சோகத்திற்கும் உள்ளாகி இருக்கிறேன். அவரது மறைவிற்கு தி.மு.க. சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். தி.மு.க.வில் சென்னை மாநகரின் முன்னணி கள வீரர் களில் ஒருவராகவும், துறைமுகம் பகுதி செயலாளராகவும் அவர் ஆற்றிய பணிகளை யாரும் மறந்திட முடியாது.

கருணாநிதி, அன்பழகன் ஆகியோர் துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெறுவதற்கு பம்பரம் போல் சுழன்று பணியாற்றியவர். கருணாநிதி மட்டுமன்றி, என் மீதும் பாசத்தை அருவி போல் கொட்டியவர். அவர் மறைந்தாலும் அவரது பணிகளும், தியாகங்களும் மறையாது. எல்.பலராமன் மறைவால் வாடும் அவரது குடும்பத்திற்கும், உறவினர்களுக்கும், கழக தொண்டர்களுக்கும் ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story