விமானம், கப்பல் மூலம் நெல்லை மாவட்டத்துக்கு 3,640 பேர் வந்துள்ளனர் - கலெக்டர் ஷில்பா தகவல்


விமானம், கப்பல் மூலம் நெல்லை மாவட்டத்துக்கு 3,640 பேர் வந்துள்ளனர் - கலெக்டர் ஷில்பா தகவல்
x
தினத்தந்தி 22 Jun 2020 11:00 PM GMT (Updated: 22 Jun 2020 7:29 PM GMT)

விமானம், கப்பல் மூலம் இதுவரை 3,640 பேர் நெல்லை மாவட்டத்துக்கு வந்துள்ளனர் என கலெக்டர் ஷில்பா தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

நெல்லை, 

நெல்லை மாவட்ட எல்லையில் உள்ள அனைத்து தேசிய நெடுஞ்சாலைகள், மாநில சாலைகள் மற்றும் அனைத்து சாலைகளிலும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு காவல்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ துறைகள் மூலம் காண்காணிக்கப்பட்டு வருகின்றன.

வெளிநாடு, வெளி மாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பயணிகள் உரிய அனுமதி சீட்டு பெற்ற பின்னரே அனுமதிக்கப்படுகிறார்கள். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் பிற மாநிலத்தவர்கள், வெளிநாடுகளில் இருந்து விமானம் மற்றும் கப்பல் மூலம் நெல்லை மாவட்டத்துக்கு வரும் அனைத்து பயணிகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா? என பரிசோதனை செய்யப்படுகிறது. அவர்கள் ஒரு வாரம் கண்காணிக்கப்பட்டு அதன் பின்னர் 2-வது பரிசோதனை செய்யப்படுகிறது. பின்னர் அவர்கள் வீடுகளுக்கு அனுப்பப்பட்டு அந்தந்த பகுதி தாசில்தார் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

3,640 பேர்

கடந்த 21-ந் தேதியின்படி வெளி நாட்டில் இருந்து விமானம் மற்றும் கப்பல் மூலம் இதுவரை 3,640 பயணிகள் நெல்லை மாவட்டத்துக்கு வந்துள்ளனர். வெளி மாநிலங்களில் இருந்து சுமார் 11,200 பயணிகள் வந்துள்ளனர். மேற்கண்ட அனைவரும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

கடந்த 21-ந் தேதி நிலவரப்படி 640 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்கண்ட நபர்களில் 442 பேர் நெல்லை அரசு மருத்துவமனையில் இருந்து குணமடைந்து சென்றுள்ளனர். 198 பேர் மட்டும் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா தொற்றால் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 4 பேர் மரணமடைந்துள்ளனர். தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 198 பேரின் வீடுகளை சேர்ந்த மொத்தம் 221 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

கண்காணிப்பு பணி தீவிரம்

தற்போது நெல்லை மாநகராட்சி பகுதியில் 25 வார்டுகளும், 6 கிராம பஞ்சாயத்துகளிலும் கண்காணிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகள் அனைத்திலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை மூலம் கபசுர குடிநீர் மற்றும் நோய் தடுப்பு மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story